search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்மிரிதி இரானி, மோடி
    X
    ஸ்மிரிதி இரானி, மோடி

    இன்று 70-வது பிறந்த நாள் : தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துக்காக அரசியலுக்கு வந்தவர் மோடி - ஸ்மிரிதி இரானி

    தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துக்காக அரசியலுக்கு வந்தவர் மோடி என்று மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி புகழாரம் சூட்டியுள்ளார்.
    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடியின் 70-வது பிறந்த நாள் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளதையொட்டி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்தார். பாராட்டுக்களை தேடுவதற்காக அல்லாமல், தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துக்காக அவர் வந்தார்.தனது நாட்டு மக்கள் மற்றும் பெண்களுக்கான அவருடைய அபிலாஷைகள், தேசத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி, அமைப்பை வலுப்படுத்துவது ஆகும். முயற்சியின்மை தகுதியற்றது. அமைப்பின் இலக்கை மிகவும் சிறியதாக வைக்கக்கூடாது. இதுவே அவருடைய பயணத்தின் உள்ளார்ந்த அம்சம் ஆகும்.

    அவரது மக்கள் பணி 18 ஆண்டுகள் 11 மாதங்கள் என தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பேரழிவு பூகம்பத்தில் இருந்து அவசரமாக மீட்டெடுக்கும் பொறுப்புடன் குஜராத் மாநில முதல்-மந்திரி பதவியில் அமர்ந்தவர். பேரிடரில் இருந்து மீட்டு, தனது மாநிலத்தின் பழைய தோற்றத்தை உறுதி செய்தார். மக்களால், மக்களுக்காக மக்களின் முதல்-மந்திரியாக நரேந்திர மோடி பதவியேற்று ஜனநாயகத்தின் அஸ்திவாரங்களை மிகவும் சிறப்பாக பயன்படுத்தினார்.

    ‘ஷாலா பிரவேசோத்சவ்’ என்ற திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகள் உள்பட தங்கள் பிள்ளைகளை மகிழ்ச்சியோடு பெற்றோர் பள்ளியில் சேர்த்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது புதிய கல்வி கொள்கைக்கு பரவலாக பாராட்டுகள் கிடைத்திருக்கிறது. மக்களின் சுமுக வாழ்க்கைக்கும், எளிதான தொழில் நடவடிக்கைகளுக்கும் தேவையான ஒவ்வொரு முயற்சிகளையும் எடுத்த ஒரே பிரதமர் நரேந்திர மோடி தான்.

    11 கோடி குடும்பங்களுக்கு கழிப்பறை கட்டி கொடுப்பதில் கவனம் செலுத்திய வேளையில், நாட்டிலேயே முதல் முறையாக மாதவிடாய் சுகாதார நெறிமுறைகளை உருவாக்குவதில் அவருடைய அரசு கூடுதலாக அர்ப்பணித்துக்கொண்டது. நமது மக்களின் திறன்களுக்காக தனியாக ஒரு அமைச்சகத்தை உருவாக்கினார். பணம் இல்லாமல் தங்களுடைய கனவுகளை மெய்ப்பிக்க முடியாமல் போனவர்கள் எளிதாக கடன் உதவி பெறுவதற்காக முத்ரா கடன் உதவி திட்டத்தை கொண்டு வந்தார். ஏழைகளும் உயர் சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் நாட்டிலேயே முதல் முறையாக 10 கோடி ஏழை குடும்பங்கள் மருத்துவ காப்பீட்டுக்குள் வருகிறார்கள்.

    ‘மாற்றத்தை கொண்டு வருவதற்கான ஆணை நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நம்முடைய முயற்சிகளை மேம்படுத்துவதன் மூலம் நாம் அதற்கு நீதி அளிக்க முடியுமா?’ என்று அடிக்கடி சொல்லுவார். இதுதான் மோடி அரசியலின் சிறப்பம்சமாகும். அந்த வைராக்கியம் இருந்ததால் தான் கடந்த 6 ஆண்டுகளில் ஒவ்வொரு மாதமும் நினைவுகூரத்தக்க மாற்றங்களை இந்தியா காண நரேந்திர மோடி உதவி புரிந்திருக்கிறார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது உள்ளிட்ட நடவடிக்கைகளால் குறை கூறியவர்கள் கூட தற்போது அவற்றை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.

    பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய 70 ஆண்டு கால நோக்கங்களை நிறைவேற்றுவதால், புதிய இந்தியா வளைந்து கொடுக்கக்கூடிய, அர்த்தம் உள்ள, நியாயமான மற்றும் ஒளிமயமானதாக இருக்கும் என்று ஒருவரால் கற்பனை செய்ய முடியும். அந்த மாற்றத்தை நிர்வாக ரீதியாக நரேந்திர மோடியால் மட்டுமே கொண்டு வர முடியும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×