search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    திருக்காட்டுப்பள்ளி அருகே தொட்டிலில் தூங்கிய குழந்தை பாம்பு கடித்து பலி

    திருக்காட்டுப்பள்ளி அருகே தொட்டிலில் தூங்கிய குழந்தை பாம்பு கடித்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
    திருக்காட்டுப்பள்ளி:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள செந்தலை மெயின் ரோட்டை சேர்ந்தவர் லோகநாதன். விவசாயி. இவருடைய மனைவி அபிராமி. இவர்களுடைய 1½ வயது குழந்தை ஆர்யா நேற்று முன்தினம் மாலை வீட்டில் தொட்டிலில் தூங்கி கொண்டிருந்தது. அப்போது திடீரென ஆர்யா சத்தம் போட்டு அழுதான்.

    குழந்தையின் அழுகுரல் கேட்டு பதறிப்போன அபிராமி ஓடிச்சென்று தொட்டிலில் இருந்து குழந்தை ஆர்யாவை வெளியே எடுத்து பார்த்தார். அப்போது ஆர்யா மயக்க நிலையில் இருந்தான். மேலும் தொட்டிலின் அருகில் இருந்து நாகப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. குழந்தையை பாம்பு கடித்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்த அபிராமி, உடனடியாக ஆர்யாவை செந்தலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார். அங்கு அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் ஆர்யாவை மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆர்யாவை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அபிராமியின் வீட்டின் அருகே ஆறு மற்றும் வயல் பகுதிகள் உள்ளன. மேலும் அபிராமியின் வீடும் கீற்று வீடு ஆகும். எனவே அவரது வீட்டுக்குள் எளிதாக பாம்பு புகுந்து குழந்தையை கடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    தொட்டிலில் தூங்கிய குழந்தை பாம்பு கடித்து இறந்த சம்பவம் செந்தலை பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
    Next Story
    ×