search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நெல்லை அருகே பட்டா மாற்றம் செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் கைது

    நெல்லை அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மண்டல துணை தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று கையும், களவுமாக கைது செய்தனர்.
    மானூர்:

    நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு பகுதியைச் சேர்ந்தவர் அன்பு ஹெரால்ட் (வயது 26). இவரது தாத்தா பெயரில் 19 சென்ட் நிலம் மானூர் அருகே பள்ளிக்கோட்டை பகுதியில் உள்ளது. அதை தனது பெயருக்கு மாற்றி பட்டா வாங்க 2018-ம் ஆண்டு அன்பு ஹெரால்ட் விண்ணப்பித்து இருந்தார்.

    ஆனால், இதுவரை அவரது பெயருக்கு பட்டா மாற்றவில்லை. இதையடுத்து மானூர் மண்டல துணை தாசில்தார் மாரியப்பன் என்பவரை கடந்த 10-ந் தேதி அன்பு ஹெரால்ட் சந்தித்து பேசினார். அப்போது மாரியப்பன் பட்டா மாற்றம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டார். பின்னர் ரூ.15 ஆயிரம் தருவதாக அன்பு ஹெரால்ட் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத அன்பு ஹெரால்ட் இதுகுறித்து நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரத்தை அன்பு ஹெரால்டிடம் கொடுத்து அனுப்பினர்.

    நேற்று மானூர் தாலுகா அலுவலகத்தில் இருந்த மாரியப்பனிடம் ரூ.15 ஆயிரத்தை அன்பு ஹெரால்ட் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு மெக்லரின் எஸ்கால், இன்ஸ்பெக்டர் ராபின் ஞானசிங் தலைமையிலான போலீசார் கையும், களவுமாக மாரியப்பனை பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த ரசாயனம் தடவிய பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை விசாரணைக்காக நெல்லைக்கு அழைத்து வந்தனர். மானூர் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×