search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மோதல் - தி.மு.க.வினர் 4 பேர் மீது வழக்கு

    பொள்ளாச்சி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மோதலில் ஈடுபட்ட சம்பவம் குறித்து தி.மு.க.வினர் 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் உள்ளது நாயக்கன்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சியின் தலைவராக தி.மு.கவை சேர்ந்த கன்னிமுத்து, ஊராட்சி செயலாளராக பிரபு என்பவரும் உள்ளனர்.

    ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் போட்டோவை வைக்க வேண்டும் என 4-வது வார்டு கவுன்சிலரான மணிகண்டன் என்பவர் கோரிக்கை விடுத்தார். ஆனால் இதுவரை ஊராட்சி தலைவரும், செயலாளரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று காலை நாயக்கன் பாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான அ.தி.மு.க.வை சேர்ந்த சண்முக வடிவேல் என்பவர் தனது ஆதரவாளர்களான சிவராமன், ராமகிருஷ்ணன் மற்றும் பலருடன் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு முதல்-அமைச்சரின் படத்தை மாட்டுவதற்காக வந்தார். அப்போது அங்கு தற்போதைய ஊராட்சி தலைவர் கன்னிமுத்து தலைமையிலான அவரது ஆதரவாளர்கள் முதல்-அமைச்சர் படத்தை மாட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் இருதரப்பிலும் பலர் லேசான காயம் அடைந்தனர். சம்பவம் குறித்து அறிந்ததும் வால்பாறை டி.எஸ்.பி. விவேகானந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தகராறில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தார்.

    அதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முதலமைச்சரின் போட்டோ மாட்டப்பட்டது.

    இதற்கிடையே அ.தி.மு.க.வை சேர்ந்த சிவராமன், ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆனைமலை போலீசில் ஊராட்சி மன்ற தலைவர் கன்னிமுத்துவின் ஆதரவாளர்கள் எங்களை தாக்கியதாக புகார் கொடுத்தனர்.

    அதன்பேரில் தி.மு.க.வை சேர்ந்த சபரி, கோவிந்தராஜ், முத்துகிருஷ்ணன், முருகேசன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×