search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொப்பரை தேங்காய்
    X
    கொப்பரை தேங்காய்

    கொப்பரை தேங்காய் விலை உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி

    கொப்பரை தேங்காய் விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
    சுல்தான்பேட்டை:

    கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, ஆனைமலை, நெகமம், பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 2 கோடி தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த மரங்களில் பறிக்கப்படும் தேங்காய், இளநீர் ஆகியவை திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இது தவிர உலர வைக்கப்பட்ட கொப்பரை தேங்காயானது எண்ணெய் தயாரிக்க கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காங்கேயம், வெள்ளக்கோவில் ஆகிய வெளிமார்க்கெட்டுகளில் ஒரு கிலோ கொப்பரை தேங்காய் ரூ.95-க்கு கொள்முதல் ஆனது. அதன்பிறகு தமிழகம் மற்றும் கேரளாவில் தேங்காய் எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கொப்பரை தேங்காய் கொள்முதல் விலை தொடர்ந்து உயர்ந்தது.

    தற்போது கொப்பரை தேங்காய் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.105 ஆக உள்ளது. இதேபோன்று கடந்த 15 நாட்களுக்கு முன்பு விவசாயிகளிடம் இருந்து ரூ.26-க்கு கொள்முதல் செய்யப்பட்ட ஒரு கிலோ தேங்காய், தற்போது ரூ.29-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இது தென்னை விவசாயிகளை மகிழ்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது. இதுகுறித்து சுல்தான்பேட்டை பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

    ஊரடங்கு காரணமாக தேங்காய் மற்றும் கொப்பரை விற்பனை பாதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் சில தளர்வுகளால் தற்போது வெளிமார்க்கெட்டுகளில் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் தோப்பு பராமரிப்பு செலவு மற்றும் உரம் விலை உயர்ந்து இருக்கிறது. மேலும் தென்மேற்கு பருவமழையால் மரத்தில் இருந்து பூக்கள் விழுவது அதிகரித்து விட்டது. இதனால் விளைச்சல் குறைந்து உள்ளது.

    தற்போதைய கொள்முதல் விலை உயர்வு, எந்த லாபத்தையும் தராது. கொள்முதல் விலை கிலோ கொப்பரைக்கு ரூ.120 மற்றும் தேங்காய்க்கு ரூ.32 என கிடைத்தால் மட்டுமே கட்டுப்படியாகும். 

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×