search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சேலம் அருகே குடும்பத்தகராறில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி

    சேலம் அருகே குடும்பத்தகராறில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    சூரமங்கலம்:

    சேலம் அருகே உள்ள திருமலைகிரி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 32). அங்கு உள்ள ஒரு வெள்ளிப்பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சத்யா (29). இவர்களுக்கு கிருத்திகா (9), வாசுதேவன் (5), சந்தியா (3) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. இதனால் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால், சத்யா மனவேதனை அடைந்தார்.

    இதைத்தொடர்ந்து சத்யா அந்த பகுதியில் உள்ள விவசாய தோட்டத்துக்கு சென்று, அங்கிருந்த விஷச்செடியை பறித்து வந்தார். பின்னர் அதை அரைத்து 3 குழந்தைகளுக்கும் கொடுத்து உள்ளார். பின்னர் தற்கொலை செய்து கொள்வதற்காக அந்த விஷத்தை அவரும் குடித்து உள்ளார். இதனால் சிறிது நேரத்தில் 4 பேரும் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கீழே விழுந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அங்கு உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடும்பத்தகராறில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×