search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 3 பெண்களிடம் தாலி சங்கிலி பறிப்பு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

    காரிமங்கலம் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 3 பெண்களிடம் மர்ம நபர்கள் 7 பவுன் தாலி சங்கிலிகளை பறித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    காரிமங்கலம்:

    காரிமங்கலம் அடுத்த செல்லமாரம்பட்டி கோணயன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பழனி, விவசாயி. இவருடைய மனைவி பழனியம்மாள் (வயது 50). இவர்களுக்கு திருப்பதி (31), சசிகுமார் (30) கோகுல்ராஜ் (25) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். பழனியின் 3 மகன்களும் வேலைக்காக வெளியூர் சென்றுவிட்டனர்.

    இதனால் அவர் ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ள வீட்டில் மனைவி மற்றும் 3 மருமகள்கள், குழந்தைகளுடன் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றார். இவர்கள் வீட்டின் கதவை பூட்டாமல் தூங்கியதாக தெரிகிறது. இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு 2 மணி அளவில் வீட்டிற்குள் நுழைந்து தூங்கிக்கொண்டு இருந்த பழனியின் மருமகள்கள் சசிகலா, செவ்வந்தி, சங்கீதா ஆகிய 3 பேர் கழுத்தில் இருந்த தாலிசங்கிலிகள், தங்ககாசு, குண்டு மணி ஆகியவற்றை பறித்துள்ளனர்.

    பின்னர் அந்த மர்ம நபர்கள் பழனியின் மனைவி பழனியம்மாளின் கழுத்தில் இருந்த தாலி சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். இதனால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சத்தம் கேட்டு எழுந்த 3 மருமகள்களும் கழுத்தில் பார்த்தபோது தாலி சங்கிலிகள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து காரிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ், சப்-இன்ஸ்பெக்டர் விஜயசங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது மர்ம நபர்கள் 3 பேரின் கழுத்தில் இருந்த 7 பவுன் தாலி சங்கிலிகளை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×