search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓட்டுனர் பயிற்சி
    X
    ஓட்டுனர் பயிற்சி

    ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள்

    ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய வழிகாட்டி நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழகத்தில் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளை நடத்த அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த பள்ளிகளை கொரோனா பரவல் காலகட்டத்தில் எப்படி நடத்த வேண்டும் என்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வகுத்தளிக்கப்பட்டுள்ளன.

    அவற்றை பின்பற்றி ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் நடத்தப்பட வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளை திறக்கக்கூடாது. முககவசம் அணிவது, சமூக இடைவெளி விடுவது ஆகியவை பின்பற்றப்படுகிறதா? என்பதை கவனிக்க வேண்டும்.

    65 வயதை கடந்தவர்கள், வேறு நோய்வாய்ப்பட்டவர்கள், கர்ப்பிணிகள் ஓட்டுனர் பயிற்சி பெற செல்ல வேண்டாம். அனைத்து பயிற்சி பள்ளிகளிலும் சானிடைசர், உடல் வெப்ப சோதனை கருவி வைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

    அங்கு வரும் ஒவ்வொருவருக்கும் தினமும் உடல் வெப்பம் சோதிக்கப்பட வேண்டும். அவர்களின் செல்போன் எண், ஆதார் எண் ஆகியவை தனிப்பதிவேட்டில் குறிக்கப்பட வேண்டும். அந்த பதிவேடு அரசின் ஆய்வுப் பணி அலுவலர்களிடம் காட்டப்பட வேண்டும்.

    கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய அறிவுரையை பதாகைகளில் தொங்கவிட வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். வகுப்பறைகளில் நீண்டநேரம் பாடம் நடத்த வேண்டாம். பாடங்களை வாசித்து தெரிந்துகொள்ளும் வகையில் வைக்க வேண்டும்.

    முடிந்தவரை பாடங்களை ஆன்லைனில் நடத்தலாம். வகுப்பறைகளில் சமூக இடைவெளி விடும் அளவில் ஆட்களை அனுமதிக்க வேண்டும். கைகள் அதிகம் படக்கூடிய பொருட்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். பயிற்சி பெற வருகிறவர்கள், பயிற்சியாளர் அனைவரும் ஆரோக்கிய சேது செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

    கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் ஊழியர்கள் யாரும் பயிற்சிப் பள்ளிக்கு வர வேண்டாம். பணப்பரிமாற்றம் இல்லாத வகையில் கட்டணங்களை வசூலிக்க வேண்டும்.

    65 வயது கடந்த பணியாளர்கள், கர்ப்பிணி பணியாளர்கள், நோய்வாய்ப்பட்டிருக்கும் பணியாளர்கள் பணிக்கு வராமல் இருப்பது நல்லது. ஒருவேளை வந்தால், யாரிடமும் நேரடி தொடர்பில் இருக்கக்கூடாது. யாருக்காவது தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக அவர்களை தனிமைப்படுத்தி, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

    கார் ஓட்டும் பயிற்சியின்போது ஏ.சி. போடக்கூடாது. ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும். பயிற்சியாளர் மற்றும் 2 பேர் மட்டுமே ஒரு நேரத்தில் காரில் இருக்க வேண்டும். கையுறைகளை அனைவரும் அணிய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×