search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி
    X
    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி

    அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்காவிட்டால் புதுவையில் மீண்டும் முழு ஊரடங்கு- நாராயணசாமி

    செப்டம்பர் மாதம் வரை தொற்றின் வேகம் அதிகரிக்கும். கொரோனாவை ஒழிப்பதில் அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்காவிட்டால் புதுவையில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவையில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தற்போது சாவு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் 22 பேர் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

    இந்தநிலையில் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி சட்டசபை வளாகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    புதுச்சேரி மாநிலத்தில் தொற்றினால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க 6 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவில் இடம்பெற்றுள்ள டாக்டர்கள், நர்சுகள் வீடு வீடாக சென்று மருத்துவம் பார்த்து வருகிறார்கள். யாருக்காவது சுவாச கோளாறு ஏற்பட்டால் உடனடியாக அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    மாநிலத்தில் தற்போது அதிகப்படியாக உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் கொரோனா நிவாரண நிதியில் இருந்து 50 ஆயிரம் உமிழ்நீர் பரிசோதனை கிட்டுகள் வாங்க ரூ.1 கோடியே 20 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் வசிக்கும் மக்களின் உமிழ்நீர் பிற மாநிலங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் பரிசோதிக்கப்படுகிறது. இதனால் முடிவுகள் வர தாமதம் ஆகிறது. உரிய காலத்தில் முடிவுகளை தெரிந்துகொள்ள அதிவிரைவு பரிசோதனை கருவிகள் வாங்க உள்ளோம்.

    புதுவையில் கடந்த சில நாட்களாக தொற்று அதி வேகமாக பரவி வருகிறது. மக்களின் ஒத்துழைப்பும் அரசுக்கு குறைந்து வருகிறது. அரசின் விதிமுறைகளை கடைபிடிப்பது இல்லை. குறிப்பாக சமூக இடைவெளி, முககவசம் அணிவது போன்றவற்றை கடைபிடிப்பது இல்லை. பல கோவில்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

    நீரிழிவு, இதயநோய், சுவாசக்கோளாறு உள்ளவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 2 மாதங்களாக தொற்றின் வேகம் அதிகரித்து உள்ளது. இந்த வேகம் செப்டம்பர் மாதம் வரை இருக்கும் என்று நினைக்கிறேன்.

    வருகிற 12-ந் தேதி பேரிடர் மேலாண்மைகுழு கூட்டம் நடக்க உள்ளது. அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் அதில் கடுமையான முடிவுகள் எடுக்கப்படும். தேவைப்பட்டால் புதுவையில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். எங்களுக்கு மாநில வருவாய் பற்றி கவலை இல்லை. மக்களின் உயிர்தான் முக்கியம். மக்கள் ஒத்துழைக்காவிட்டால் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகளை மூடுவதை தவிர வேறு வழிஇல்லை.

    புதுவையில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பினைத் தடுக்க டாக்டர்கள் உதவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளேன். தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளின் ஒத்துழைப்பும் அவசியம். அவர்கள் நமக்கு கூடுதலாக படுக்கை வசதிகள் செய்து தருவதாக கூறியுள்ளனர். சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் மட்டும் ஒத்துழைப்பு தருவதில்லை. அவர்களும் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் கல்லூரி நிர்வாகத்தை அரசே எடுத்துக் கொள்ளும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×