search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண் குத்திக்கொலை - கணவர் வெறிச்செயல்

    நாகர்கோவிலில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண்ணை கணவர் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஆசாரிபள்ளம் வசந்தம் நகரைச் சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 49). இவருடைய மனைவி நீலாவதி (43). இவர்களுக்கு 18 வயதில் மகன் இருக்கிறார். வீட்டின் கீழ் தளத்தில் ராமதாஸ் மரக்கடை நடத்தினார். மேல்தளத்தில் குடும்பத்துடன் வசித்தார். இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நீலாவதியின் நடத்தையில் ராமதாசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ராமதாஸ் தனது மனைவியை விட்டு பிரிந்து மேல ஆசாரிபள்ளத்தில் உள்ள தனது பூர்வீக வீட்டில் குடியேறினார். மகனை, மனைவியுடன் விட்டு செல்ல மனமில்லாமல் அவரை தன்னுடனேயே அழைத்துச் சென்று விட்டார். நீலாவதி மட்டும் வசந்தம் நகரில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். அதே சமயத்தில், மனைவி வசித்து வந்த வீட்டின்  கீழ்தளத்தில் ராமதாஸ் தொடர்ந்து மரக்கடையை நடத்தி வந்தார்.

    இத்தகைய பிரச்சினைக்கு இடையே நேற்று காலை நீலாவதி அவருடைய வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் நேசமணிநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி மற்றும் ஆசாரிபள்ளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு நீலாவதி கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவருடைய உடலின் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. அவரை கொலை செய்தது யார்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

    பின்னர் போலீசார் நீலாவதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் அக்கம், பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். இதில், நள்ளிரவு வீட்டில் பயங்கர சத்தம் கேட்டதாகவும், நீலாவதிக்கும், அவருடைய கணவர் ராமதாசுக்கும் பிரச்சினையாக இருக்கலாம் என்று நினைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே மனைவியை கொன்றதாக ராமதாஸ் ஆசாரிபள்ளம் போலீசாரிடம் சரண் அடைந்தார். மனைவியை கொன்றது ஏன்? என்பது தொடர்பாக போலீசார் ராமதாசிடம் விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மனைவி கள்ளக்காதலனுடன்  உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த ஆத்திரத்தில் ராமதாஸ் கொலை வெறிச்செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமதாசை கைது செய்தனர்.

    Next Story
    ×