search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    போலீஸ் விசாரணைக்கு பயந்து ஆட்டோ டிரைவர் தற்கொலை

    செம்பட்டி அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
    செம்பட்டி:

    செம்பட்டி அருகே உள்ள ஜெ.புதுக்கோட்டை அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் முருகன். அவருடைய மகன் கவியரசு (வயது 23). இவர், சின்னாளபட்டியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவர் கடந்த 30-ந்தேதி திருமண வயது பூர்த்தியடையாத ஒரு காதல் ஜோடியை தனது ஆட்டோவில் வாடகைக்கு ஏற்றி சென்று, திண்டுக்கல் அருகே ஒரு இடத்தில் இறக்கிவிட்டு வந்தார்.

    இந்தநிலையில், அந்த பெண்ணின் பெற்றோர் சின்னாளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், கடந்த 30-ந்தேதி கவியரசை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கவியரசுவின் தாயார் உமா போலீஸ் நிலையத்துக்கு வந்தார்.

    அவரிடம், மறுநாள் (31-ந்தேதி) காலை 10 மணிக்கு மீண்டும் கவியரசை விசாரணைக்கு அழைத்து வருவேன் என்று போலீசார் எழுதி வாங்கியதாக தெரிகிறது. ஆனால் அன்றையதினம், போலீசுக்கு பயந்து கவியரசு விசாரணைக்கு செல்லவில்லை. தன்மீது போலீசார் நடவடிக்கை எடுத்து விடுவார்கள் என்று கருதிய கவியரசு, தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவியரசு நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்தநிலையில் கவியரசுவின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர். 

    இது தொடர்பாக போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கவியரசுவின் உறவினர்கள் கூறும்போது, சின்னாளபட்டியை சேர்ந்த ஒருவர் போலீசாருடன் சேர்ந்து, கவியரசு மற்றும் அவரது குடும்பத்தினரை மிரட்டினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலை பெற்றுக்கொள்வோம் என்றனர்.

    Next Story
    ×