search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செ.ராமலிங்கம் எம்.பி., ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.
    X
    செ.ராமலிங்கம் எம்.பி., ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.

    தமிழகத்தில் வேகமெடுக்கும் தொற்று - எம்.பி.க்கள், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா

    தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமெடுத்துள்ளது. மேலும் 2 எம்.பி.க்கள், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
    சென்னை:

    நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றால் தினமும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபட்டு வரும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 21 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகை செல்வராசு எம்.பி.க்கு (இந்திய கம்யூனிஸ்டு) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி ப.சிதம்பரம். இவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில் லேசான பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதையொட்டி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள டாக்டர்கள் அவருக்கு ஆலோசனை தெரிவித்தனர். அதன்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் கார்த்தி ப.சிதம்பரம் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

    இதேபோல் மயிலாடுதுறை தொகுதி தி.மு.க. எம்.பி. செ.ராமலிங்கத்திற்கு (வயது 75) கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள சீனிவாசநல்லூரில் வசித்து வந்த ராமலிங்கம் எம்.பி., கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் இறந்த தி.மு.க. பிரமுகர் ஒருவரின் இறுதி சடங்கில் பங்கேற்றார்.

    இந்த நிலையில் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவில் ராமலிங்கம் எம்.பி.க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற்றது.

    இதேபோல தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. எம்.ராமச்சந்திரனுக்கும்(74) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., தனது வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று இருந்தார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் அந்த மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
    Next Story
    ×