search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    ஆன்லைன் வகுப்புகள் குறித்த தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் - ஐகோர்ட்

    ஆன்லைன் வகுப்புகள் குறித்த தமிழக அரசின் விதிமுறைகளை அனைத்துப் பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட் வலியுறுத்தியுள்ளது.
    சென்னை:

    ஆன்லைன் வகுப்பு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு, மத்திய அரசு அளித்த பதில் மனுவில், ஆன்லைன் மூலம் மழலையர் வகுப்பு குழந்தைகளுக்கு தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும். 1 முதல் 8-ம் வகுப்பு வரை தலா 45 நிமிடங்கள் வீதம் 2 வகுப்புகளும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை தலா 45 நிமிடம் வீதம் 4 வகுப்புகளும் நடத்தலாம் என கூறப்பட்டது.
     
    இதையடுத்து மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளதால், தமிழக அரசின் நிலை என்ன? என்று ஐகோர்ட்டு ஏற்கனவே கேள்வி எழுப்பி இருந்தது.

    இதற்கிடையே, இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன் ஜூலை 28-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் ஜெ.ரவீந்திரன், ‘இந்த வழக்கு தொடரப்பட்டு 3 மாதங்களாகியும், இதுவரை தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து எந்த பதிலும் அளிக்காமல் உள்ளது. எனவே, ஆன்லைன் வகுப்புகள் குறித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றார்.

    அதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட கால அவகாசம் வேண்டும் என்றார். இதை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை ஆகஸ்டு 3-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர். 

    இதற்கிடையே, கடந்த மாதம் 30 ஆம் தேதி ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை அரசாணையாக வெளியிட்டது. அதில் முழுமையான இணையவழி, பகுதியளவு இணையவழி, ஆப்லைன் மோடு ஆகிய முறைகளில் வகுப்பு நடத்தலாம் என்றும் தொலைக்காட்சி மூலமாக பாடங்களை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த ஐகோர்ட், அனைத்துப் பள்ளிகளும் தமிழக அரசின் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தது. இதையடுத்து, வழக்கு விசாரணையை19ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
    Next Story
    ×