search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தற்கொலை செய்த ஆசிரியையின் உறவினருக்கு கத்திக்குத்து - கணவர் கைது

    மாடத்தட்டுவிளை பகுதியில் தற்கொலை செய்த ஆசிரியையின் உறவினருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக ஆசிரியை கணவர் கைது செய்யப்பட்டார்.
    அழகியமண்டபம்:

    குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே மாடத்தட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஜாண்பால் (வயது 37). இவருடைய மனைவி வனஜா ரோஸ் (33). கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லை. குழந்தை இல்லாததால், ஜாண்பாலின் தம்பி பிள்ளையை அவர்கள் வளர்த்து வந்துள்ளனர். வனஜாரோஸ் தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று விஷ மாத்திரை தின்று வனஜாரோஸ் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே தற்கொலை செய்த வனஜாரோஸின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து சொந்த ஊரில் அடக்கம் செய்ய கொண்டு வரப்பட்டது.

    மாடத்தட்டுவிளை பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் ஆசிரியையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி சடங்கு நிகழ்ச்சியில் உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது, தற்கொலை செய்த ஆசிரியையின் உறவினரான எட்டாமடை பகுதியை சேர்ந்த ஜெனிஸ் (27) என்பவர் ஜாண்பாலிடம் தகராறு செய்தார்.

    அநியாயமாக வனஜாரோஸை சாகடித்து விட்டாயே என ஜாண்பால் மீது ஜெனிஸ் குற்றம் சாட்டினார். இதனால் ஆத்திரமடைந்த ஜாண்பால் திடீரென தான் வைத்திருந்த கத்தியை எடுத்து ஜெனிஸை குத்தி விட்டார். இதில் அவர் படுகாயமடைந்தார். இதுபற்றி உடனடியாக இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயமடைந்த ஜெனிஸை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாண்பாலை கைது செய்தனர்.

    தற்கொலை செய்த ஆசிரியையின் உடலை அடக்கம் செய்யும் போது உறவினரை கத்தியால் குத்தியதாக கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×