search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவக்குமார்
    X
    சிவக்குமார்

    இளம்பெண் பாலியல் பலாத்காரம்: விசைத்தறி உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை

    பள்ளிபாளையத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான விசைத்தறி உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 29). விசைத்தறி உரிமையாளர். இவர் வட்டி தொழிலும் செய்து வந்துள்ளார். இவரிடம் ஈரோடு பெரிய அக்ரஹாரத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி ஒருவர் கடந்த 2009-ம் ஆண்டு ரூ.20 ஆயிரம் வட்டிக்கு வாங்கி உள்ளார்.

    இந்த பணத்தை கேட்டு விசைத்தறி தொழிலாளியை சிவக்குமார் பலமுறை மிரட்டி உள்ளார். இருப்பினும் பணத்தை கொடுக்காததால் விசைத்தறி தொழிலாளியின் 19 வயது மகளை தன்னுடைய குடோனுக்கு வரவழைத்த சிவக்குமார், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அப்பெண்ணை தனது நண்பர் ஆமையன் என்கிற ரவியுடன் (32) சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் ஆமையன் என்கிற ரவி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததை சிவக்குமார் வீடியோ எடுத்து கடந்த 2010-ம் ஆண்டு யூடியுப்பில் பதிவேற்றம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிவக்குமார், ஆமையன் என்கிற ரவி ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த ஆமையன் என்கிற ரவி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். விசைத்தறி உரிமையாளர் சிவக்குமார் மீதான பாலியல் பலாத்கார வழக்கு நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிவக்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.13 ஆயிரம் அபராதம் காணொலி காட்சி மூலம் விதிக்கப்பட்டது. சிறை தண்டனை விதிக்கப்பட்ட சிவக்குமார் ஏற்கனவே சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீது அதே பகுதியை சேர்ந்த கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் வேலுச்சாமியை கொலை செய்தது தொடர்பான வழக்கும் நிலுவையில் இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×