search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை   கோப்புப்படம்
    X
    கொரோனா பரிசோதனை கோப்புப்படம்

    விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பஸ் டிரைவர் உள்பட 4 பேர் கொரோனாவுக்கு பலி - எண்ணிக்கை 25 ஆக உயர்வு

    விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு அரசு பஸ் டிரைவர் உள்பட 4 பேர் இறந்தனர். இதனால் பலியானோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அதுபோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1,723 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 21 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

    இந்த சூழலில் விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

    அதன் விவரம் வருமாறு:-

    விழுப்புரம் மகாராஜபுரம் மின்வாரிய காலனி பகுதியை சேர்ந்த 84 வயதுடைய மூதாட்டிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அவருடைய உமிழ்நீர், பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது. இதன் முடிவில் அவர், கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக நேற்று முன்தினம் மாலை விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதித்து டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் இரவு 10.50 மணியளவில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதேபோல் திண்டிவனம் ரோஷணைபாட்டை பகுதியை சேர்ந்த 62 வயதுடைய மூதாட்டி காய்ச்சல், சளியால் அவதிப்பட்டதால் அவரை கடந்த 11-ந் தேதி காலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 8.20 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

    இதேபோல் செஞ்சி அருகே உள்ள கீழ்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த 46 வயதுடைய நபர், அரசு போக்குவரத்துக்கழக புதுச்சேரி பணிமனையில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் கொரோனா அறிகுறியுடன் கடந்த 14-ந்தேதி இரவு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருடைய உமிழ்நீர் பரிசோதனை செய்தபோது, கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கொரோனா வார்டில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 12.15 மணியளவில் இறந்தார்.

    மேலும் திண்டிவனம் அருகே கொள்ளார் கிராமத்தை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர், கொரோனா அறிகுறியுடன் கடந்த 13-ந்தேதி மதியம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்பின்னர் அவரை தனி வார்டில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 3.15 மணியளவில் இறந்தார். தொடர்ந்து, சுகாதாரத்துறை விதிமுறைப்படி அவர்கள் 4 பேரின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 21-ல் இருந்து 25 ஆக உயர்ந்துள்ளது.
    Next Story
    ×