search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெருந்தலைவர் காமராஜர்
    X
    பெருந்தலைவர் காமராஜர்

    பெருந்தலைவர் காமராஜரின் பெருமைகளை இன்றைய தலைமுறை அறிய பேசுவோம்- மு.க.ஸ்டாலின்

    பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடித்து, அவருடைய பெருமைகளை இன்றைய தலைமுறையினர் அறிய பேசுவோம் என்று மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தனது கட்சி தொண்டர்களுக்கு எழுதிய கடிதம் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜூலை 15. உலக நாட்காட்டிகள் அனைத்திலுமே இந்த தேதி இருக்கும் என்றாலும், தமிழகத்திற்கு இந்த நாளுக்கென தனியானதொரு சிறப்பு உண்டு. ஆம். கல்வி வளர்ச்சி நாளாக தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் கொண்டாடப்படும் இந்த நன்னாள்தான் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளாகும். தமிழக அரசியல் வரலாற்றில், தனி முத்திரை பதித்த முதல்-அமைச்சராக 9 ஆண்டு காலம் ஆட்சி செய்து, இந்திய அரசியலுக்கும் அதுவரை இல்லாத புதிய வழிகாட்டியாக திகழ்ந்தவர் பெருந்தலைவர் காமராஜர்.

    அவர் தந்த ‘கே பிளான்’ துணைக்கண்ட அரசியலில் தொலைநோக்கான தூய அத்தியாயம்.

    திராவிட இயக்கத்துக்கும், காங்கிரஸ் பேரியக்கத்துக்கும் சமூக அரசியல் களத்தில் மாறுபட்ட நிலைப்பாடுகள் இருந்தபோதும், மேடைகளில் கடுமையான விமர்சனங்கள் மாறி மாறி வைக்கப்பட்டபோதும், பெருந்தலைவர் காமராஜரை, தந்தை பெரியார் ‘பச்சைத்தமிழர்’ என்று அழைத்தார். பேரறிஞர் அண்ணா “குணாளா.. குலக்கொழுந்தே..” என்றே கொண்டாடி எழுதினார். முத்தமிழறிஞர் கருணாநிதி தனது சட்டமன்ற அனுபவங்கள் குறித்த பேட்டியில், தமிழகத்தின் ‘சிறப்பான முதல்-அமைச்சர்’ என்று காமராஜரைக் குறிப்பிட்டிருக்கிறார். திராவிட இயக்க தலைவர்கள் அனைவரும், காமராஜர் மீது தனிப்பட்ட அன்பு செலுத்தினர். பெருந்தலைவர் காமராஜரும் அத்தகைய அரசியல் பண்பாட்டினை கடைப்பிடித்தார்.

    காமராஜர் வாழ்ந்தபோதும், அவர் வரலாறாக ஆனபோதும் அவர் மீதான மரியாதையை பல வகைகளிலும் வெளிப்படுத்தியவர் கருணாநிதி. நெருக்கடி நிலையை எதிர்த்து பெருந்தலைவருக்கு மரியாதை செலுத்திய கருணாநிதி, தனது ஆட்சியையே 1976-ல் விலையாக கொடுத்தார்.

    எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது, சட்டமன்றத்தில் பெருந்தலைவர் காமராஜர் உருவப்படம் திறக்கப்பட்ட வேளையில், முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்., எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதியை தனது அறைக்கு தனியாக அழைத்து, பெருந்தலைவரின் படத்திற்கு கீழே எழுதுவதற்கு பொருத்தமான வாசகத்தை கேட்ட நிலையில், ‘உழைப்பே உயர்வு தரும்‘ என்று கருணாநிதி அந்த கணமே எழுதிக்கொடுத்து, கர்மயோகி காமராஜருக்கு பெருமை சேர்த்தார்.

    தி.மு.க. ஆட்சி அமைத்த காலங்களில் எல்லாம் பெருந்தலைவர் காமராஜரை பெருமைப்படுத்தும் வகையில் கருணாநிதி சிறப்புகளை செய்தபடியே இருந்தார். 2006-2011 தி.மு.க. ஆட்சிக்காலத்தில், 5-ம் முறை தமிழக முதல்-அமைச்சராக ஆட்சி செய்த கருணாநிதி, மாணவர்களுக்கு மதிய உணவுடன் இலவச கல்வி தந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளினை தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள்தோறும் கல்வி வளர்ச்சி நாளாக எல்லா காலங்களிலும் கொண்டாடவேண்டும் என்பதற்காக சட்டமியற்றி, அதனை நடைமுறைப்படுத்தி, ஆண்டுதோறும் ஜூலை 15-ந்தேதியன்று கல்வி வளர்ச்சி நாளாக கடைப்பிடிக்கச் செய்தார். ஆட்சிமாற்றம் ஏற்பட்டபோதும் இன்றளவும் அந்த நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

    கல்விக் கண் திறந்த கர்மவீரர். தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றிய தலைசிறந்த முதல்-அமைச்சர். அரசியல் பொதுவாழ்வில் அரிய மாமனிதர். திராவிட இயக்க தலைவர்களின் மாறா அன்புக்கு பாத்திரமானவர். கருணாநிதியின் மரியாதைக்குரிய பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளாம் ஜூலை 15-ந்தேதியன்று, அண்ணா அறிவாலயத்தில் பெருந்தலைவரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்படவிருக்கிறது. நம் தலைவர் கருணாநிதி காட்டிய வழியில் ஜூலை 15-ம் நாளினை, கல்வி வளர்ச்சி நாளாக கடைப்பிடித்து, பெருந்தலைவர் பெருமைகளை இன்றைய தலைமுறை அறிய பேசுவோம். ஏற்றிப் போற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×