search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    செல்போனுக்கு ‘ரீசார்ஜ்’ செய்து தராததால் மாணவர் தற்கொலை

    தென்தாமரைகுளம் அருகே செல்போனுக்கு ‘ரீசார்ஜ்‘ செய்து தராததால் மாணவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
    தென்தாமரைகுளம்:

    குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள கணபதிபுரம் தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் ஆண்டனி டேனியல் (வயது 52), தொழிலாளி. இவருடைய மகன் ஆன்றோ பெர்லின் (18). நாகர்கோவில் அருகில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஆன்றோ பெர்லின் வீட்டில் இருக்கும் போது எப்போதும் செல்போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருப்பது வழக்கம். இதை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனில் நெட் கார்டு தீர்ந்துள்ளது. இதனால் செல்போனுக்கு ‘ரீசார்ஜ்‘ செய்ய தந்தையிடம் ஆன்றோ பெர்லின் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. அதோடு நின்று விடாமல், பணம் கேட்டு தொடர்ந்து நச்சரித்ததால் செல்போனை போட்டு உடைத்து விடுவேன் என்று மகனை திட்டியதாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆன்றோ பெர்லின் தன்னுடைய மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டார்.

    அதன் பிறகு ஆன்றோ பெர்லினை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. கோபித்துக் கொண்டு சென்ற மகனை காணாததால் பதறிய பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தனர். எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் ஆண்டனி டேனியல் ராஜக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில், என்னுடைய மகனை காணவில்லை என்று புகார் அளித்தார். போலீசார் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து காணாமல் போன ஆன்றோ பெர்லினை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் தென்தாமரைகுளம் அருகே சவுக்குதோப்பு கடற்கரையில் ஒரு ஆண் பிணம் கரை ஒதுங்கியது. இதனை பார்த்தவர்கள் தென்தாமரைகுளம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்ராஜ், ஜான் கென்னடி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றினர்.

    இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்த நபர் தந்தையுடன் தகராறு செய்துவிட்டு சென்ற ஆன்றோ பெர்லின் என்பது தெரியவந்தது. தந்தையிடம் கோபித்துக் கொண்டு வெளியே சென்ற அவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. செல்போனுக்கு ‘ரீசார்ஜ்‘ செய்ய தந்தை பணம் தராததால் மாணவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    Next Story
    ×