search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைகள் திறக்க தடை
    X
    கடைகள் திறக்க தடை

    மாவட்டத்தில் 57 இடங்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிப்பு - மக்கள் நடமாட, கடைகள் திறக்க தடை

    மாவட்டத்தில் 57 இடங்களை நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவித்துள்ள மாவட்ட நிர்வாகம், மக்கள் நடமாட்டம் மற்றும் கடைகளை திறக்கவும் முற்றிலுமாக தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த போதிலும் பல்வேறு பகுதிகளில் நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமப்பகுதிகளில் நோய் தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் 57 இடங்களில் நோய் கட்டுப்பாட்டு திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி இந்த பகுதிகளில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் மக்கள் நடமாட்டம், வணிக நடவடிக்கைகளுக்கு முற்றிலுமாக தடைவிதிக்கப்படுகிறது. பேரிடர் மேலாண்மை திட்டத்தின்படி அறிவிக்கப்பட்டுள்ள இந்த தடை உத்தரவு இன்று முதல் நோய் கட்டுப்பாட்டுத்திட்டம் முடியும் வரை அமலில் இருக்கும்.

    நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய பேரூராட்சி, நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த சட்டம் முறையாக அமல்படுத்தப்படுவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இப்பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் எவ்வித தடை இல்லாமல் கிடைப்பதை கலெக்டரின் விவசாய பிரிவு நேர்முக உதவியாளர் உறுதி செய்ய வேண்டும். இப்பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி என்ற அறிவிப்பு பலகையை வைப்பதோடு, சமூக இடைவெளியை பின்பற்றி மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்ற துண்டு பிரசுரங்களை வினியோகிக்க வேண்டும். கீழ்கண்ட பகுதிகளில் காய்ச்சல் முகாம்களை அடிக்கடி நடத்த வேண்டும்.

    அனைத்து வீடுகளிலும் கணக்கெடுப்பு செய்து நோய் தொற்று இல்லாததை உறுதி செய்ய வேண்டும். அனைத்து பொதுமக்களுக்கும் கபசுரகுடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இப்பகுதிகளில் மக்கள் நடமாட்டம் முழுமையாக தடை செய்வதை உறுதி செய்ய வேண்டும். தவிர்க்க இயலாத காரணங்களால் வீட்டில் இருந்து வெளியே வரும் நபர்கள் முக கவசம் அணிவது கட்டாயம். மருந்து கடைகளில் முறையான மருத்துவ சீட்டிற்கே மருந்துகள் வினியோகம் செய்ய வேண்டும். மருந்துகள் அல்லாத சில பொருட்கள் விற்பனை செய்ய தடைவிதிக்கப்படுகிறது. இப்பணியினை வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, போலீசார் மற்றும் உள்ளாட்சிதுறையினர் ஒருங்கிணைந்து திறம்படி செயல்பட்டு நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேலும் நோய் தொற்று பரவாமல் இருப்பதை உறுதி செய்வது முக்கிய பணியாகும்.

    விருதுநகர் அண்ணாமலை தெரு, மொன்னிதெரு, முத்துராமன்பட்டி, சிவந்திபுரம் ஆத்துமேடு, பர்மாகாலனி, லட்சுமிநகர், என்.ஜி.ஓ.காலனி, பாண்டியன்நகர், ரெயில்வேபீடர் ரோடு, அய்யனார்நகர், சூலக்கரை, ஓ.கோவில்பட்டி, அல்லம்பட்டி, சத்திரரெட்டியபட்டி, மெட்டுக்குண்டு, ஆமத்தூர், சிவகாசி சீதக்காதி தெரு, முஸ்லிம் தெரு, காளியப்பாநகர், சாட்சியாபுரம், வெற்றிஞானியார் தெரு, விஸ்வநத்தம், பூலாவூரணி, ரிசர்வ்லைன், எம்.புதுப்பட்டி, சித்துராஜபுரம், பாரைப்பட்டி, பேராப்பட்டி, வெம்பக்கோட்டை செல்லம்பட்டி, எதிர்கோட்டை, கே.மடத்துப்பட்டி, மலையடிப்பட்டி, கட்டபொம்மன் தெரு. சாத்தூர் பங்களாதெரு, நகராட்சி தெரு, போத்திரெட்டிபட்டி, படந்தால்,

    ராஜபாளையம் செட்டியார்பட்டி, கலங்காபேரி, ஸ்ரீவில்லிபுத்தூர் கூனங்குளம், வத்திராயிருப்பு மேலக்கோட்டையூர், கிருஷ்ணன்கோவில், சுந்தரபாண்டியம் மற்றும் சில பகுதிகள் என 57 இடங்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஏற்கனவே தமிழக அரசு அறிவித்தப்படி இன்று மட்டும் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். 57 நோய்கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர பிற பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ள விதிமுறைகள்படி வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் செயல்படும்.
    Next Story
    ×