search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    பழுதாகி நின்ற லாரி மீது சரக்கு வேன் மோதல் - 2 தொழிலாளர்கள் பலி

    அச்சரப்பாக்கம் அருகே பழுதாகி நின்ற லாரி மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் தனியார் கூரியர் நிறுவன தொழிலாளர்கள் 2 பேர் பலியானார்கள்.
    அச்சரப்பாக்கம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கிளியனூர் அருகே உள்ள கீழ் கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன்கள் ஆனந்த் (வயது 31), அருண்குமார் (27). அதே பகுதியை சேர்ந்த இவர்களது உறவினர் மாசிலாமணி (30). இவர்கள் 3 பேரும் சென்னையில் உள்ள தனியார் கூரியர் தபால் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

    ஆனந்த் வேன் டிரைவராகவும், அருண்குமார் கிளனராகவும், மாசிலாமணி பார்சல்களை ஏற்றி, இறக்கும் சுமை தூக்குபவராகவும் வேலை செய்து வந்தனர். இவர்கள் 3 பேரும் நேற்று காலை வழக்கம்போல் சென்னையில் இருந்து கூரியர் தபால் மற்றும் பார்சல்களை சரக்கு வேனில் ஏற்றிக்கொண்டு புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்தனர். ஆனந்த் சரக்கு வேனை ஓட்டினார். அருண்குமார், மாசிலாமணி ஆகியோர் அவருக்கு அருகில் அமர்ந்து பயணம் செய்தனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தை அடுத்த புதுப்பேட்டை அருகே சென்றபோது, அங்கு இரும்பு பொருட்களை ஏற்றிச்சென்ற லாரி பழுதாகி சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அந்த லாரியின் பின் பகுதியில் கூரியர் தபால் ஏற்றி வந்த சரக்கு வேன் பயங்கரமாக மோதியது. இதில் சரக்கு வேனின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.

    இதில் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த அருண்குமார், மாசிலாமணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். சரக்கு வேனை ஓட்டிய ஆனந்தன் படுகாயம் அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த ஆனந்தனை மீட்டு சிகிச்சைக்காக மேல்மருவத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான அருண்குமார், மாசிலாமணி ஆகியோரது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×