search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்டு கிடந்த மாரிமுத்து உடலை போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தியபோது எடுத்த படம்.
    X
    கொலை செய்யப்பட்டு கிடந்த மாரிமுத்து உடலை போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தியபோது எடுத்த படம்.

    திருவாரூரில் ஜாமீனில் வந்த பிரபல ரவுடி சரமாரி வெட்டிக்கொலை

    திருவாரூரில், ஜாமீனில் வந்த பிரபல ரவுடியை சரமாரியாக வெட்டிக்கொன்று உடலை தார்ப்பாயில் சுற்றி ரோட்டோரத்தில் வீசி விட்டு சென்றனர்
    திருவாரூர்:

    திருவாரூர் பெரிய மில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து என்கிற கராத்தே மாரிமுத்து(வயது 35). இவருக்கு திருமணமாகி புனிதா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். பிரபல ரவுடியான இவர் மீது திருவாரூர் போலீஸ்் நிலையத்தில் கொலை வழக்கு உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

    கடந்த மாதம் ஆயுதங்களுடன் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட முயன்றதாக திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்து, தோத்தாமணி, பிரகாஷ் ஆகிய 3 பேரை கைது செய்து நாகை கிளை சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகை கிளை சிறையில் இருந்து மாரிமுத்து ஜாமீனில் வெளியே வந்தார். அவரை அழைத்து வருவதற்காக அவருடைய நண்பர்கள் 6 பேர் காரில் நாகை சென்றனர். ஆனால் நள்ளிரவு வெகு நேரம் ஆகியும் மாரிமுத்து வீட்டிற்கு வரவில்லை.

    இதனால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் மாரிமுத்து கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று காலை திருவாரூர் மில் தெரு அருகில் உள்ள ரெயில் நிலையத்தின் குட்ஷெட் பகுதியில் ரோட்டோரத்தில் கருப்பு நிற தார்பாய் ஒன்று சந்தேகத்திற்குரிய வகையில் கிடந்தது. அந்த வழியாக சென்றவர்கள் அந்த தார்ப்பாயை திறந்து பார்த்தனர். அப்போது தார்ப்பாய்க்குள் ரவுடி மாரிமுத்து படுகொலை செய்யப்பட்டு கிடப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருவாரூர் துணை போலீஸ் சூப்்பிரண்டு தினேஷ்குமார் தலைமையில் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொலை செய்யப்பட்டு கிடந்த மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    மாரிமுத்துவின் உடல் கிடந்த இடத்தில் ரத்தக்கறை எதுவும் இல்லாதது தெரிய வந்தது. எனவே மாரிமுத்துவை கொலையாளிகள் வேறு எங்கோ வைத்து சரமாரியாக வெட்டிக்கொன்று பின்னர் உடலை தார்ப்பாயில் வைத்து சுற்றி இங்கு கொண்டு வந்து ரோட்டோரத்தில் வீசி விட்டு சென்றது தெரிய வந்தது.

    இதனையடுத்து அங்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய், மாரிமுத்துவின் உடல் கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஒடிச்சென்று நின்று விட்டது. பின்னர் மாரிமுத்து உடலை போலீசார் ஆம்புலன்சில் ஏற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக திருவாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கொலை செய்த கொலையாளிகள் யார்? இந்த கொலைக்கான காரணம் என்ன? ஏற்கனவே நடந்த கொலை தொடர்பாக பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் மாரிமுத்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது மாரிமுத்துவால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் அவரை கொலை செய்தார்களா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த மாரிமுத்துவை அழைப்பதற்காக காரில்் சென்ற 6 பேரும் தலைமறைவாகி விட்டனர். இதனால் இந்த கொலையில் அவர்களுக்கு தொடர்பு இருக்குமா? என்று கோணத்திலும் விசாரணை நடத்தி வரும் போலீசார், தலைமறைவான கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    பிரபல ரவுடியை கொன்று உடலை தார்ப்பாயி்ல் வைத்து சுற்றி ரோட்டோரத்தில் வீசிவிட்டு சென்ற சம்பவம் திருவாரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    Next Story
    ×