search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேஷன்கடைக்கான பூமிபூஜை நிகழ்ச்சியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்ட போது எடுத்த படம்.
    X
    ரேஷன்கடைக்கான பூமிபூஜை நிகழ்ச்சியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்ட போது எடுத்த படம்.

    கொரோனா காலத்தில் மு.க.ஸ்டாலின் அறிக்கை எதுவும் கொடுக்கவில்லை - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி

    கொரோனா காலத்தில் அதை தடுக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆக்கப்பூர்வமான அறிக்கைகள் எதுவும் கொடுக்கவில்லை என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.
    சிவகாசி:

    சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்துராஜபுரம் பஞ்சாயத்தில் சிவகாசி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து 2 ரேஷன்கடைகள் கட்டப்பட உள்ளன. இதற்கான பூமி பூஜை நேற்று காலை நடைபெற்றது.

    பூமி பூஜையை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமமூர்த்தி, ரவி, பஞ்சாயத்து தலைவர் லீலாவதிசுப்புராஜ், துணைத்தலைவர் காளிமுத்து, முன்னாள் யூனியன் தலைவர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், விஸ்வநத்தம் ஆரோக்கியம், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் சுபாஷினி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலாளர் அருள்ராஜ் செய்திருந்தார்.

    நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஆனால் எதிர்கட்சிகள் அவரின் செயல்பாடுகளை பாராட்ட மனம் இல்லாமல் குறை சொல்லிக்கொண்டு இருக்கிறது.

    தமிழகத்தில் மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். தண்ணீர், மின்சாரம் தடையின்றி கிடைக்கிறது. சாத்தான்குளம் சம்பவத்தில் உண்மை உலகிற்கு தெரிய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்கு பின்னர் உண்மை நிலை உலகிற்கு தெரியும்.

    கொரோனாவை தடுக்க முதலில் அனைவரும் மன தைரியத்துடன் இருக்க வேண்டும். எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் உணவுகளையும், சித்த மருந்துகளையும் உரிய ஆலோசனைக்கு பின்னர் எடுத்துக்கொண்டால் கொரோனா பாதிப்பில் இருந்து நம்மை நாமே காத்துக்கொள்ளலாம். கொரோனா காலத்தில் மு.க.ஸ்டாலின் ஆக்கப்பூர்வமான அறிக்கைகள் எதுவும் கொடுக்கவில்லை. அவர் கொடுக்கும் ஆலோசனைகளை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் நல்ல கருத்துகளை யார் கூறினாலும் முதல்-அமைச்சர் ஏற்றுக்கொள்வார். இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×