search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசார் முககவசம் அணியாமல் வந்தவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்ததை படத்தில் காணலாம்.
    X
    போலீசார் முககவசம் அணியாமல் வந்தவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்ததை படத்தில் காணலாம்.

    முக கவசம் அணியாமல் வந்தவர்களின் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

    விழுப்புரத்தில் முக கவசம் அணியாமல் வெளியே வந்தவர்களின் மோட்டார் சைக்கிள்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
    விழுப்புரம்:

    கொரோனா பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் அத்தியாவசிய தேவைக்காக வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் முககவசம் அணிந்து வர வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. ஆனால் இதை சிலர் முறையாக பின்பற்றுவதில்லை. இதுவும் தொற்று பரவலுக்கான ஒரு வழியாக அமைந்து விடுகிறது.

    இந்த நிலையில் விழுப்புரம் நகரில் பொதுமக்கள் முககவசம் அணிந்து வருகிறார்களா? கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா என்று நேற்று காலை விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர் விசுவநாதன் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது கட்டுப்பாடுகளை மீறி அதிக அளவிலான பயணிகளை ஏற்றி வந்த ஒரு ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அதன் டிரைவர்களை எச்சரிக்கை செய்து, அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்தனர். அதேபோல் மோட்டார் சைக்கிளில் முககவசம் அணியாமல் வந்தவர்களை நிறுத்தி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்கள் ஓட்டி வந்த வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதன் மூலம் மொத்தம் 120 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு, பழைய பஸ் நிலையம்,காந்தி சிலை போன்ற இடங்களிலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×