search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    தேனி மாவட்டத்தில் 2 போலீஸ்காரர்கள் உள்பட மேலும் 61 பேருக்கு கொரோனா

    தேனி மாவட்டத்தில் 2 போலீஸ்காரர்கள் உள்பட மேலும் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
    தேனி:

    தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால், நேற்று முன்தினம் வரை 535 பேர் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பெரியகுளம் பகுதியில் தென்கரையில் 8 வயது சிறுமி, 65 வயது மூதாட்டி, அவருடைய மகன் உள்பட 10 பேர், தாமரைக்குளத்தில் 29 வயது வாலிபர், அழகர்சாமிபுரத்தில் தம்பதி என 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


    தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் பொதுப்பணித்துறை ஊழியர், பிரபல ஜவுளிக்கடையில் வேலை பார்த்த தொழிலாளர்கள் 2 பேர் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 4 பேர் பெண்கள்.

    தேனி ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்த பெண் போலீசுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் காட்ரோடு சோதனை சாவடி, பெரியகுளம் தண்டுபாளையம் சோதனை சாவடிகளில் பணியாற்றி வந்தார். அவருடைய கணவர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருந்து கிடங்கில் வேலை பார்த்து வருகிறார்.

    இதேபோல் கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டரின் கார் டிரைவராக பணியாற்றும் போலீஸ்காரருக்கும், சின்னமனூரில் 7 வயது சிறுமி, சிறுமியின் தாய் உள்பட 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தேனி அருகே கோடாங்கிபட்டியில் பெண் உள்பட 3 பேருக்கும், கொடுவிலார்பட்டி, அரண்மனைப்புதூர், வெங்கடாசலபுரம் ஆகிய ஊர்களில் தலா ஒருவருக்கும், ஆண்டிப்பட்டி அருகே வரதராஜபுரத்தில் அரபு நாட்டில் இருந்து திரும்பி வந்தவருக்கும், சித்தையகவுண்டன்பட்டியில் அரசு பஸ் டிரைவரின் தந்தைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    உத்தமபாளையத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி, ஆண்டிப்பட்டி சக்கம்பட்டியில் அண்ணன்-தம்பியான 2 சிறுவர்கள் உள்பட 5 பேர், ஜெயமங்கலத்தில் செவிலியர் உள்பட 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    போடியில் போலீஸ் இன்ஸ்பெக்டரின் 83 வயது தாய், 12 வயது சிறுமி உள்பட 6 பேருக்கும், போடி அருகே பத்ரகாளிபுரத்தில் அக்காள்- தம்பியான 8 வயது சிறுமி, 4 வயது சிறுவன் ஆகிய 2 பேருக்கும், மேலச்சொக்கநாதபுரம், மீனாட்சிபுரம், ராசிங்காபுரம் பகுதியில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கூடலூரை சேர்ந்த தாய், மகன் 2 பேருக்கும், கம்பத்தை சேர்ந்த 47 வயது நபருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    ஒரே நாளில் 61 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 596 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் நேற்று 2 பேர் குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 153 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது, 441 பேர் சிகிச்சையில் உள்ளனர்

    Next Story
    ×