search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுவன் மரணம்
    X
    சிறுவன் மரணம்

    ஆரல்வாய்மொழி அருகே வீட்டு சுற்றுச்சுவர் இடிந்து 5 வயது சிறுவன் பலி

    ஆரல்வாய்மொழி அருகே வீட்டு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 5 வயது சிறுவன் பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரல்வாய்மொழி:

    தக்கலை அருகே முத்தலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மனைவி கலையரசி. இவர்களுக்கு 9 வயதில் அஞ்சனா என்ற மகளும், 5 வயதில் அஸ்விந்த் என்ற மகனும் இருந்தனர். ராமச்சந்திரன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அஸ்விந்த் யு.கே.ஜி. படித்து வந்தான்.

    இந்தநிலையில் கலையரசி, தன்னுடைய சகோதரி கவிதா வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு சென்றார். கவிதா வீடு, ஆரல்வாய்மொழி அருகே சீதப்பால் கிழக்கு தெருவில் உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு விசேஷ நிகழ்ச்சி முடிவடைந்ததும் கலையரசி தன்னுடைய குழந்தைகளுடன் அங்கேயே தங்கி விட்டார். நேற்று காலை 11 மணிக்கு அஸ்விந்த் வீட்டு முன்பு விளையாடி கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் சுற்றுப்புற சுவர் திடீரென இடிந்து சிறுவன் அஸ்விந்த் மீது விழுந்தது.

    இதில் இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் அலறி துடித்தான். உடனே அவனை அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அஸ்விந்த் பரிதாபமாக இறந்தான்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில், சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    Next Story
    ×