search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீடாமங்கலத்தில் துணை மின்நிலையம் அமைக்கும் பணியை பார்வையிட்ட அமைச்சர் காமராஜ்
    X
    நீடாமங்கலத்தில் துணை மின்நிலையம் அமைக்கும் பணியை பார்வையிட்ட அமைச்சர் காமராஜ்

    விவசாயிகளுக்கு தேவைப்பட்டால் மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை- அமைச்சர் காமராஜ்

    டெல்டா பகுதி விவசாயிகளுக்கு தேவைப்பட்டால், 15 மணி நேரம் கூட மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.
    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் ரூ.16 கோடியே 83 லட்சத்தில் புதிய துணை மின்நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த துணை மின்நிலையம் மூலம் நீடாமங் கலம் நகரம், பரப்பனாமேடு, காமராஜர் காலனி, பழைய நீடாமங்கலம், கொட்டையூர், பயத்தஞ்சேரி, அரவத்தூர், கிளியூர், குச்சுப்பாளையம், மாணிக்கமங்கலம், கல்விக்குடி, ராமப்பத்தோட்டம், ரிஷியூர், ஒளிமதி, வையகளத்தூர், அனுமந்தபுரம், ராஜப்பையன் சாவடி, கானூர், பருத்திக் கோட்டை, பெரம்பூர், முல்லை வாசல், கொத்தமங்கலம், வடகாரவயல் ஆகிய பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 160 மின்நுகர்வோர்கள் பயன் அடைவர்.

    இந்த பணிகளை அமைச்சர் காமராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகள் குறித்து அதிகாரி களிடம் கேட்டறிந்த அவர் பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசின் அனைத்து துறைகளும் வலுவாக செயல்பட்டு வருகிறது. தமிழகம், தற்போது மின்மிகை மாநிலமாக உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் டெல்டா பகுதி விவசாயிகளின் தேவைகளை உணர்ந்து அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

    நான் மின்துறை அமைச்சரிடம் மும்முனை மின்சாரம் குறித்து பேசினேன். அப்போது அவர், முதல்-அமைச்சரின் உத்தரவு பெற்று டெல்டா பகுதி விவசாயிகளுக்கு தேவைப்பட்டால் 15 மணி நேரம் கூட மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    திருவாரூர் மாவட்டத்திற்கு 225 மெகாவாட் மின்சாரம் தேவை. ஏற்கனவே திருவாரூர் மாவட்டத்தில் 26 துணை மின்நிலையங்கள் இயங்கி வருகின்றன. தற்போது நீடாமங்கலத்திலும், எடமேலையூரிலும் 110 கிலோ வாட் திறன் தொண்ட துணை மின்நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் 9 இடங்களில் துணை மின்நிலையங்கள் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை களில் தமிழக அரசு செம்மையாக பணியாற்றி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த், மன்னார்குடி உதவி கலெக்டர் புண்ணியகோடி, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர்கள் (திட்டம்) ராஜகுணசீலன், கிருஷ்ணவேணி, செயற்பொறி யாளர் ராதிகா, உதவி செயற்பொறியாளர் சங்கர், தாசில்தார் மதியழகன், ஒன்றிய ஆணையர்கள் ஆறுமுகம், பாஸ்கர், பேரூராட்சி செயல் அலுவலர் சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×