search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீன்பிடி தடைக்காலம்
    X
    மீன்பிடி தடைக்காலம்

    குமரி மேற்கு கடற்கரையில் இன்று முதல் மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்

    குமரி மேற்கு கடற்கரையில் இன்று முதல் 45 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது.
    குளச்சல்:

    மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த தடைக்காலம் 2 பருவ காலமாக உள்ளது. கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரையும், மேற்கு கடற்கரை மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிராமத்தில் ஜூன் 1-ந் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி வரையும் விசைப்படகுகளுக்கு தடை விதிக்கப்படும்.

    இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருவதையடுத்து கடலில் மீன் பிடிப்பதற்கும் மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கட்டுமரங்கள் மட்டும் மீன் பிடிக்க செல்ல அரசு அனுமதியளித்துள்ளதை அடுத்து கடந்த 1½ மாதமாக கட்டுமரம் மூலம் மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் குமரி மேற்கு மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் கடந்த 1-ந் தேதி தொடங்கியது. ஆனால் ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் கடந்த 2 மாதமாக விசைப்படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் இந்த ஆண்டு வழக்கமான மீன்பிடி தடைக்காலத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் என விசைப்படகினர் வலியுறுத்தினர். இதையடுத்து 60 நாள் தடைக்காலத்தை 45 நாட்களாக குறைத்து ஜூன் 1-ந் தேதி முதல் 15 -ந் தேதி வரை விசைப்படகுகள் மீன்பிடிக்க அரசு அனுமதியளித்தது.

    இதையடுத்து கடந்த 1-ந் தேதி முதல் குமரி மேற்கு கடற்கரையில் விசைப்படகு மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க சென்றனர். இந்த அனுமதி இன்றுடன் (திங்கட்கிழமை) முடிவடைகிறது. இன்று முதல் குமரி மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல மாட்டார்கள்.

    இதனால் குளச்சலில் இருந்து ஆழ்கடல் பகுதிக்கு சென்ற விசைப்படகுகள் கரை திரும்பிய வண்ணம் உள்ளன. ஏற்கனவே கரை திரும்பிய விசைப்படகுகள் 12-ந் தேதி முதலே மீண்டும் கடலுக்கு செல்லவில்லை. கரை திரும்பிய படகுகள் குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன.

    இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் விசைப்படகுகளை பழுது பார்ப்பது, வலைகளை பின்னுவது போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள். ஆனால் கட்டுமரங்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க செல்லும். 
    Next Story
    ×