search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுவனை வாசலுக்கு வெளியே நிற்க வைத்து மருத்துவம் பார்க்கும் டாக்டர்-
    X
    சிறுவனை வாசலுக்கு வெளியே நிற்க வைத்து மருத்துவம் பார்க்கும் டாக்டர்-

    சிறுவனை வாசலுக்கு வெளியே நிற்க வைத்து மருத்துவம் பார்த்த டாக்டர்- விளக்கம் கேட்டு நோட்டீசு

    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில், சிறுவனை வாசலுக்கு வெளியே அதிக தூரத்தில் நிற்க வைத்து அறையின் உள்ளே அமர்ந்து டாக்டர் ஒருவர் மருத்துவம் பார்த்தார். இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை அதிகாரி நோட்டீசு அனுப்பியுள்ளார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே கண்டமங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். நேற்று முன்தினம் தொண்டை வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக ஒரு சிறுவன், அந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றான். அங்கு டாக்டர் அறை உள்ள ஒரு கட்டிடத்திற்கு வெளியே வாசலிலே அந்த சிறுவன் நிற்க வைக்கப்பட்டான். தொடர்ந்து அந்த கட்டிடத்தின் உள்ளே, அதாவது ஒரு மீட்டருக்கும் அதிக தூரத்தில் இருக்கையில் அமர்ந்திருந்த படி டாக்டர் அமர்ந்திருந்தார்.

    சிறுவனிடம், என்ன பிரச்சனைக்காக சிகிச்சை பெற வந்துள்ளாய் என்று அங்கு பணியில் இருந்த டாக்டரும், சுகாதார பணியாளர் ஒருவரும் கேட்டனர். பின்னர் அந்த சிறுவனை அருகில் வர வைக்காமல் அதே தூரத்திலேயே நிற்க வைத்து அந்த டாக்டர், தான் உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்தபடியே சிறுவனின் முகத்தில் ‘டார்ச் லைட்’ அடித்து பின்னர் மருந்து, மாத்திரைகளை எழுதி கொடுத்துள்ளார். இதுசம்பந்தமான வீடியோ ஒன்று தற்போது வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிறரால் கொரோனா நோய் தொற்று தமக்கு வந்து விடக்கூடாது என்பதில் ஒவ்வொருவரும் மிகவும் உஷாராக இருப்பது முக்கியம். அதற்காக இவ்வளவு தூரம் சமூக இடைவெளியை பின்பற்றி சிறுவனுக்கு டாக்டர் ஒருவர் மருத்துவம் பார்த்துள்ள சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையேயும் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, பணியில் இருந்த டாக்டர் மற்றும் சுகாதார பணியாளர் ஆகிய இருவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியுள்ளோம். அவர்கள் அளிக்கும் விளக்கத்தை பொறுத்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    Next Story
    ×