search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கத்தரிக்காய் செடி
    X
    கத்தரிக்காய் செடி

    மலிவு விலையில் காய்கறி வழங்க கிராம மக்கள் அமைக்கும் கொரோனா தோட்டம்

    பொதுமக்களுக்கு எப்போதும் மலிவு விலையில் காய்கறிகள் வழங்க முடிவு செய்த பெரிய கொட்டக்குடி ஊராட்சி நிர்வாகம், சுமார் 2 ஏக்கர் தரிசு நிலத்தை சீரமைத்து காய்கறி தோட்டம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது பெரிய கொட்டக்குடி ஊராட்சி. இங்கு 8 கிராமங்கள் உள்ளன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் கிராம மக்களுக்கு பெரிய கொட்டக்குடி ஊராட்சி மன்றம் சார்பில் காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

    இதையடுத்து பொதுமக்களுக்கு எப்போதும் மலிவு விலையில் காய்கறிகள் வழங்க ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. இதற்காக அங்கு புதுமையான முயற்சியாக கொரோனா காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு வருகிறது.

    பெரியகொட்டக்குடியில் புதர் மண்டிக்கிடந்த சுமார் 2 ஏக்கர் தரிசு நிலத்தை சீரமைத்து அங்கு காய்கறி தோட்டம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு கால்நடைகள் செல்லாத வகையில் வேலி அமைக்கப்பட்டு, அங்கு காய்கறிகள் நடவு செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. இதுதவிர நிழல் தரும் மரக்கன்றுகளும் நடப்பட உள்ளது.

    இது தொடர்பாக பெரிய கொட்டக்குடி ஊராட்சி மன்ற தலைவர் தனபால் கூறியதாவது:-

    “எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட 8 கிராம மக்கள் ஊரடங்கு காலத்தில் வேலைவாய்ப்பு இன்றி அவதிப்பட்டு வந்தனர்.

    எனவே அவர்களுக்கு ஊராட்சி சார்பில் மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவை தினந்தோறும் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதனால் ஊராட்சிக்கு அதிக செலவு ஏற்பட்டது.

    எனவே அந்த பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் உதவியுடன், சுமார் 2 ஏக்கர் அரசு புறம்போக்கு தரிசு நிலத்தை சீரமைத்து, அங்கு ஏற்கனவே போடப்பட்டு உள்ள ஆழ்துளை கிணறு மூலம் காய்கறி மற்றும் பழங்களை பயிர் செய்ய உள்ளோம்.

    இங்கு கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை பாதி விலைக்கு மக்களிடம் விற்பனை செய்யவும் திட்டம் உள்ளது. இதனால் ஊராட்சிக்கு வருமானம் கிடைக்கும். கிராம மக்களுக்கும் மலிவு விலையில் காய்கறிகள் கிடைக்கும்.

    இந்த காய்கறி தோட்டத்தில் கத்தரி, தக்காளி, வெண்டை, கொத்தவரை, முள்ளங்கி, பூசணி, பாகற்காய், புடலங்காய் ஆகிய காய்கறிகளும், கடலை செடி மற்றும் சப்போட்டா, மா, பலா உள்ளிட்ட நிழல் தரும் மரக்கன்றுகலை நடும் பணி நடந்து வருகிறது.

    இந்த பணிக்காக தினந்தோறும் கிராம மக்கள் மற்றும் 100 நாட்கள் வேலை திட்ட தொழிலாளர்களை பயன்படுத்தி வருகிறோம். இன்னும் 30, 40 நாட்களில் காய்கறிகள் காய்க்க தொடங்கி விடும். அதன் பிறகு இங்கிருந்து கிடைக்கும் காய்கறிகளை கிராம மக்களுக்கு நிவாரண பொருட்களாக வினியோகம் செய்ய உள்ளோம்.

    ஊரடங்கு முடிந்த பிறகு இந்த காய்கறி தோட்டத்தை இன்னும் விரிவுப்படுத்தி பல்வேறு செடிகள், மரங்கள் நடவு செய்ய உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×