search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    சென்னையில் இருந்து வந்த 3 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 42 ஆக உயர்வு

    சென்னையில் இருந்து திருவாரூர் வந்த 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
    திருவாரூர்:

    தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் சென்னை உள்பட வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் பணியாற்றி வந்தவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். அதன்படி வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து திருவாரூர் மாவட்டத்துக்கு ஏராளமானோர் திரும்பி வருகின்றனர்.

    அவ்வாறு திருவாரூர் வருபவர்கள் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நேற்று திருவாரூர் விஜயபுரம் மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபர், திருவாரூர் சுந்தரவிளாகம் பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபர், குடவாசல் திருப்பாம்புரம் பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் என 3 பேரும் சென்னையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினர். இவர்கள் சென்னையில் உள்ள மோட்டார் வாகன நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இவர்களுடைய ரத்த மாதிரி கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை முடிவில் 3 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

    பாதிக்கப்பட்டவர்களில் ஏற்கனவே 32 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருந்தனர். நேற்று ஒருவர் வீடு திரும்பினார். இதனால் தற்போது 9 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×