search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தவர் கைது

    பாபநாசத்தில் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தவரை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
    பாபநாசம்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே பண்டாரவாடையில் சிறார்களின் ஆபாச பட வீடியோக்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சமீபகாலமாக பெண்கள், சிறார்களின் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. இதற்கு ஆபாச வீடியோ பார்ப்பதும் ஒரு காரணியாக இருப்பதாக கருத்து நிலவுகிறது.

    இதனை தடுக்கும் விதமாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச இணையதளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. ஆனாலும், சில இணைய டெக்னிக்குகளை பயன்படுத்தி ஆபாச படங்களை பார்ப்பதும், பகிர்வதும் தொடர்ந்து வருகிறது.

    இந்நிலையில் தஞ்சை மாவட்டம் முழுவதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவின் பேரில் சமூக வலைதளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சிறார்களின் ஆபாச படங்களை பாபநாசம் தாலுகா, பண்டாரவாடை தக்வா நகரைச் சேர்ந்த கட்டுமான வேலை செய்யும் பி.ஏ. பட்டதாரியான ரியாஷ் அகமது (வயது 44) என்பர் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து பாபநாசம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால் தலைமையில் பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், விமலாராணி ஆகியோர் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச பட வீடியோக்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த குற்றத்திற்காக ரியாஸ் அகமதை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    அப்போது அவரிடமிருந்து குழந்தைகள் ஆபாச படங்கள் அடங்கிய லேப்டாப், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×