search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கொட்டாரத்தில் தாயை அரிவாளால் வெட்டிய மகன் கைது

    காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை, மகனே அரிவாளால் வெட்டிய சம்பவம் கொட்டாரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 59). இவருடைய 2-வது மனைவி ஜெயந்தி (50). இவர்களுடைய மகன் மதுக்குமார் (30). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு மதுக்குமாரின் தாயார் ஜெயந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதுக்குமாருக்கும், ஜெயந்திக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தன்னுடைய காதலுக்கு, பெற்ற தாயே இடைஞ்சலாக இருக்கிறாரே என்ற ஆதங்கம் மதுக்குமாருக்கு இருந்தது.

    இதற்கிடையே காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்கும்படி, மதுக்குமார் மீண்டும் ஜெயந்தியிடம் வற்புறுத்தியுள்ளார். அப்போது அவர் கண்டபடி திட்டியதாக தெரிகிறது. இதனால் மதுக்குமாருக்கு தாயின் மீது கொலைவெறி ஏற்பட்டது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மதுக்குமார் திடீரென வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பெற்ற தாயென்று பாராமல் ஜெயந்தியை வெட்டி விட்டார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாகராஜன் கன்னியாகுமரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுக்குமாரை கைது செய்தனர்.

    காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை, மகனே அரிவாளால் வெட்டிய சம்பவம் கொட்டாரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


    Next Story
    ×