search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காசி
    X
    காசி

    காசிக்கு மருத்துவ பரிசோதனை- கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாளை ஜெயிலில் அடைப்பு

    காசியின் போலீஸ் காவல் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நாளை மருத்துவ பரிசோதனை நடைபெற உள்ளது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த காசி (வயது 26) என்பவர் மீது சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் புகார் கொடுத்தார்.

    புகாரில் காசி தன்னை ஆபாச படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு மிரட்டியதாகவும், நகை, பணத்தை பறித்து கொண்டதாகவும் கூறியிருந்தார். அதன்பேரில் கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து காசியை கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் காசி, சென்னை பெண் டாக்டர் மட்டுமின்றி குமரியை சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து காசியால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் செய்யலாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் அறிவித்தார். இதற்காக அவரது செல்போன் எண்ணையும் வெளியிட்டார். அந்த எண்ணில் குமரி மாவட்டத்தை சேர்ந்த பல பெண்கள் ரகசியமாக புகார் அளித்தனர்.

    இதில் கன்னியாகுமரியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரும் அவரை காசி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியிருந்தார். அதன்பேரில் அந்த மாணவியிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், இது தொடர்பாக காசியை 6 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    போலீஸ் காவலில் கன்னியாகுமரி சிறுமி விவகாரம் தொடர்பாக பல்வேறு தகவல்களை காசியிடம் திரட்டிய போலீசார், அவரது லேப் டாப் மற்றும் செல்போனில் அவர் பதிவு செய்து வைத்திருந்த பல பெண்களின் ஆபாச படங்களை காட்டியும் விவரம் சேகரித்தனர்.

    இதில் காசியிடம் தொடர்பில் இருந்த பல பெண்கள் பற்றிய விபரங்கள் போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் காசியின் நெருங்கிய கூட்டாளிகள் பற்றிய தகவலும் கிடைத்தது. அதன்பேரில் காசியின் நண்பர் டேசன் ஜினோ என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரின் வெளிநாட்டு நண்பரை பிடிக்கவும் முயற்சி நடந்து வருகிறது. இது தவிர காசிக்கு பல்வேறு வகைகளில் உதவி புரிந்த நண்பர்களின் பட்டியலை தயாரித்து அவர்களையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இதற்கிடையே காசியின் போலீஸ் காவல் நாளையுடன் முடிவடைய உள்ளது. எனவே அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நாளை இந்த பரிசோதனை நடைபெற உள்ளது. அதன்பின்பு நாளை மாலை காசியை போலீசார் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க உள்ளனர்.

    காசி விவகாரம் பற்றி போலீசார் கூறும்போது, போலீஸ் காவலில் காசி பல்வேறு தகவல்களை கூறியுள்ளார். அவை அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. விரைவில் அவர் கொடுத்த தகவலின் பேரில் கைது வேட்டை தொடங்கும்.

    அப்போது இந்த விவகாரம் இன்னும் விஸ்வரூபம் எடுக்கும் என்று தெரிவித்தனர். இதனால் காசியின் நண்பர்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் பெண்கள் கலக்கத்தில் உள்ளனர்.

    Next Story
    ×