search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காசி
    X
    காசி

    காசியிடம் 2-வது நாளாக கிடுக்கிப்பிடி விசாரணை

    காசியிடம் 2-வது நாளாக கிடுக்கிப்பிடி விசாரணை நடந்தது. இதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் கணேசபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சுஜி என்ற காசி (வயது 26). இவர் மீது பெண்களை ஏமாற்றி பணம் பறித்ததாக 3 பெண்கள் தனித்தனியாக போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் காசி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். காசியை 3 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் காசியை 6 நாள் காவலில் எடுத்துள்ளனர். ஏன் எனில் காசியால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் அளித்த புகாரின் பேரில் மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த காசியை போலீசார் காவலில் எடுத்து இருக்கிறார்கள்.

    இதை தொடர்ந்து காசியிடம் 2-வது நாள் விசாரணை நேற்று நடந்தது. அப்போது காசிக்கு எப்படி சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது என்ற விவரங்கள் தெரியவந்தன. அதாவது காசிக்கு சமூக வலைதளம் மூலம் சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்த சிறுமியுடன் மோட்டார் சைக்கிளிலும் சுற்றி உள்ளதாக தெரிகிறது. காசியின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்து அவரிடமிருந்து விலகி இருக்கிறார். அதன் பிறகு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அதோடு பாதிக்கப்பட்ட பெண்கள் எத்தனை பேர்? என்று காசியிடம் போலீசார் கேட்டுள்ளனர். அப்போது அவராக எந்த பெண்ணையும் ஏமாற்றவில்லை என்றும், தன்னுடன் பழகியவர்களுடன்தான் பழகியதாகவும் கூறியுள்ளார். யாரையும் நான் திருமணம் செய்யவில்லை என்றும் தெரிவித்தார். எனினும் காசியிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காசியின் கூட்டாளிகள் வேறு யாரெல்லாம் என்று போலீசார் தொடர்ந்து கேள்வி கேட்பதாகவும், அதற்கு அவர் மழுப்பலாக பதில் சொல்வதாகவும் தெரிகிறது.

    இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, காசி தொடர்பாக ஏதாவது புதிய புகார்கள் அல்லது ஆதாரங்கள் சிக்குமா? என்று எதிர்பார்க்கிறோம். இதற்காக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறியதுபோல பாதிக்கப்பட்டவர்கள், செல்போனில் தொடர்பு கொண்டு கூட புகார் அளிக்கலாம். காசி பயன்படுத்திய லேப்-டாப் பறிமுதல் செய்யப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

    தற்போது லேப்-டாப்பில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆய்வு செய்ய கோர்ட்டில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. கோர்ட்டு அனுமதி அளித்தால் லேப்-டாப்பை ஆய்வகத்துக்கு அனுப்பி ஆய்வு நடத்தப்படும். பின்னர் லேப்-டாப்பில் உள்ள புகைப்படங்கள் நகலை கொண்டு விசாரணை தொடங்கப்படும். லேப்-டாப்பில் பாதிக்கப்பட்ட பெண்களின் புகைப்படங்கள் இருந்தால் அதை வைத்து சம்பந்தப்பட்ட பெண்ணை அணுக முடியும். அவர்கள் எவ்வாறு பிரச்சினையில் சிக்கினார்கள் என்பது பற்றி விசாரிக்க முடியும். எனவே அதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன“ என்றார்.
    Next Story
    ×