search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜா
    X
    ராஜா

    மேட்டூரில் கல்லால் தாக்கி தொழிலாளி படுகொலை- போலீசார் விசாரணை

    மேட்டூரில் கல்லால் தாக்கி தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேட்டூர்:

    சேலம் மாவட்டம், மேட்டூர் அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா என்ற மகாராஜா (வயது 36), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ரஞ்சிதா. இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் இரவு ராஜா வீட்டுக்கு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று காலையில் அம்மன் நகர் அருகே உள்ள டான்சி குடியிருப்பு வளாகத்தில் அவர் மர்ம நபர்களால் முகம் மற்றும் தலையில் கல்லால் தாக்கப்பட்டு இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த ராஜாவின் அண்ணன் தியாகு மேட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் படுகொலை செய்யப்பட்ட ராஜாவின் உடலை கைப்பற்றி மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் ராஜா, தனது நண்பர்களுடன் டான்சி குடியிருப்பு வளாகத்தில் பேசிக்கொண்டு இருந்ததாகவும், அப்போது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் அவரை கல்லால் தாக்கி கொலை செய்து இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.

    இதையடுத்து அவருடைய நண்பர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவர்கள் பிடிபட்டால் தான் எதற்காக கொலை நடந்தது? என்ற விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் மேட்டூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×