search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    ராஜபாளையம் அருகே கிணற்றில் மூழ்கி முதியவர் பலி

    கிணற்றில் மூழ்கி இறந்த முதியவரின் உடலை மீட்கச் சென்றவர் கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள எஸ்.ராமலிங்காபுரம் யாதவர் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 70). இவர் நேற்று மதியம் ஊருக்கு ஒருக்குப்புறமாக உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றார். குளித்துக் கொண்டிருந்தபோது முருகன் ஆழமான பகுதிக்கு சென்று சிக்கினார். சிறிது நேரத்தில் முருகன் கிணற்றில் மூழ்கி இறந்தார்.

    தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர். சம்பவ இடத்துக்கு வந்து அப்பகுதியை சேர்ந்த சிலர் மூலம் கிணற்றில் இறங்கி உடலை தேடினர். ஆனால் பலனில்லை.

    கிணற்றில் மூழ்கி இறந்தவர்களின் உடலை தேடி எடுக்கும் பணியில் எஸ்.ராமலிங்காபுரத்தைச் சேர்ந்த மஸ்தான் (வயது 50)என்பவர் ஈடுபட்டு வந்தார். முருகனின் குடும்பத்தினர் அவரை அழைத்தனர்.

    இதைத் தொடர்ந்து மஸ்தான் கிணற்றில் இறங்கி பல மணி நேரம் போராடி உள்ளே சிக்கியிருந்த முருகனின் உடலை மீட்டார். மஸ்தான் தனது தோளில் உடலை எடுத்துக்கொண்டு கிணற்று படியில் ஏறினார். அப்போது எதிர்பாராத விதமாக மஸ்தான் கால் இடறி முருகனின் உடலோடு கிணற்றில் தவறி விழுந்தார்.இதில் மஸ்தான் மூழ்கினார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் ஜெயராமன் தலைமையில் வீரர்கள் நேற்று மாலை வரை கிணற்றில் இறங்கி தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை. இரவு நேரமானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

    இன்று காலை மீண்டும் வீரர்கள் கிணற்றில் இறங்கி உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இறந்தவரின் உடலை மீட்க சென்றவரும், கிணற்றில் மூழ்கி பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×