search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    உத்தனப்பள்ளி அருகே விவசாயி கொலையில் 5 பேர் கைது

    உத்தனப்பள்ளி அருகே விவசாயியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள அனுமந்தபுரத்தைச் சேர்ந்தவர் மதனகிரியப்பா. இவரது மகன் முனிராஜ் (வயது 35). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார்சைக்கிளில் வந்து இறங்கினார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது.

    இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம், உத்தனப்பள்ளி சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலையான முனிராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து முனிராஜின் மனைவி பாக்கியா கொடுத்த புகாரின் பேரில் உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

    கொலையுண்ட முனிராஜ் விவசாயம் செய்து வந்தார். மேலும் சொந்தமாக சரக்கு வேனும் வைத்து டிரைவர் வேலையும் செய்து வந்தார். இவருக்கு பாக்கியா என்ற மனைவியும், சந்தோஷ்குமார் என்ற மகனும், சுகன்யா என்ற மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் போடிச்சிப்பள்ளியில் அரசு புறம்போக்கு பாறையில் நிலத்தில் உள்ள கல் உடைப்பது தொடர்பாக முனிராஜிக்கும், அனுமந்தபுரத்தைச் சேர்ந்த சிக்கண்ணா என்பவரின் மகன் மாதேஷ், பட்ட எல்லப்பா மகன் முனிராஜ், நாராயணப்பா மகன் மாதேஷ், அப்போஜியப்பா மகன் ஹரீஷ், ஆதி நாராயணன் மகன் சேத்தன் ஆகியோர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு முனிராஜ் வந்து கொண்டிருந்தார். அப்போது அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் காத்திருந்த மாதேஷ் கோஷ்டியினர் முனிராஜை அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டியதும், இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து இந்த கொலை தொடர்பாக மாதேஷ், பட்ட எல்லப்பா மகன் முனிராஜ், மற்றொரு மாதேஷ், ஹரிஷ், சேத்தன் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் கொலையுண்ட முனிராஜின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் நேற்று பிற்பகல் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் முனிராஜின் உடலுடன் அனுமந்தபுரம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை தங்கள் கண் முன்பு காட்டும் வரை உடலை எடுக்க மாட்டோம், என்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா அங்கு விரைந்து சென்றார். குற்றவாளிகள் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை பெற்று தரப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் உடலை எடுத்து சென்று அடக்கம் செய்தனர். இந்த கொலை சம்பவம் உத்தனப்பள்ளி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×