search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விசாரணை
    X
    விசாரணை

    வல்லம் அருகே போலீஸ்காரரை தாக்கி வீட்டை சூறையாடிய கும்பல்- 5 பேரிடம் விசாரணை

    வல்லம் அருகே போலீஸ்காரரை தாக்கி வீட்டை சூறையாடிய 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    வல்லம்:

    தஞ்சையைடுத்த பழைய கல்விராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 25), இவர் வல்லம் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று பணிமுடிந்து இரவு தனது மோட்டார் சைக்கிளில் கல்விராயன்பேட்டைக்கு சென்றுகொண்டிருந்தார்.

    அப்போது அவருக்கு முன்னாள் சென்ற மினிவேன் வழிவிடாமல் சென்றுள்ளது. பலமுறை ஒலிஎழுப்பியும் வழிவிடாமல் சென்றதால் நீண்ட தூரம் சென்றபிறகு அந்த மினிவேனை முந்திசென்று வேன் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார்.

    பின்னர் வேனை ஓட்டிவந்த ஆலக்குடியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் பூபதியை(23) சத்தம்போட்டுள்ளார். இதனால் பூபதி மற்றும் அவருடன் வேனில் வந்த 5 பேரும் காவலர் வினோத்திடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து வினோத் தனது அண்ணன் லோகுவிற்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கு வந்த அவர் 5 பேரை தட்டிக்கேட்டுள்ளார். இதில் இருபிரிவுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அங்கிருந்து திரும்பி சென்ற பூபதி உள்ளிட்ட 5 பேர் நள்ளிரவு ஆலக்குடியில் இருந்து 50பேருடன் பழைய கல்விராயன்பேட்டையில் உள்ள காவலர் வினோத் வீட்டிற்கு சென்று அவரையும் அவரது அண்ணன் லோகுவையும் சரமாரியாக தாக்கி வீட்டையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.

    அதனை தட்டிக்கேட்க வந்த அந்த தெருவாசிகளின் வீட்டையும் அடித்து உடைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீத்தாராமன், கள்ளப்பெரம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் அப்பானாஅஞ்சும் மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×