search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோயம்பேடு மார்க்கெட்
    X
    கோயம்பேடு மார்க்கெட்

    கோயம்பேட்டில் பாதிப்பு 10 ஆக உயர்வு- மேலும் 2 கூலித்தொழிலாளிகளுக்கு கொரோனா

    கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாற்றிய மேலும் 2 கூலித்தொழிலாளிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
    சென்னை:

    கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 4 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர்.

    கொத்தமல்லி வியாபாரி, சலூன் கடைக்காரர், மகாராஷ்டிரா மாநில பழ வியாபாரி மற்றும் பூ வியாபாரி ஆகியோர் அடுத்தடுத்து கொரோனா தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

    இதன் பிறகு நேற்று மார்க்கெட்டில் பணி புரிந்து வந்த கூலித்தொழிலாளிக்கும், கணவன்-மனைவி இருவருக்கும் தொற்று ஏற்பட்டது. இதன் மூலம் 7 பேர் வரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாற்றிய மேலும் ஒரு கூலித்தொழிலாளிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

    ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு இந்த கூலித்தொழிலாளி தனது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நக்கம்பாடி கிராமத்துக்கு சென்றிருந்தார். அங்கு வைத்து தான் இவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அப்பகுதி சுகாதார அதிகாரிகள் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு கூலித்தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்த செங்குன்றம் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    காய்கறி மார்க்கெட்டில் 3 சக்கர வண்டியை வைத்து லோடு ஏற்றி-இறக்கி வந்த இவர் நேற்று இரவு கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

    அவர் மூலமாக அவரது மகளுக்கும் கொரோனா தொற்று பரவி உள்ளது. இருவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×