search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    வெளியூர்களில் இருந்து சேலம் வருபவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை- மாநகராட்சி அறிவிப்பு

    வெளிமாநிலம்- வெளியூர்களில் இருந்து சேலம் வருபவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
    சேலம்:

    சேலம் மாநகராட்சி கமிஷனர் சதீஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாநகராட்சி எல்லைப் பகுதி மற்றும் மாநகரப் பகுதிகளுக்குள் காவல் துறையினரின் சார்பில் 18-&க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, பொதுமக்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

    இந்த நிலையில் இன்று முதல் வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களிலிருந்து சேலம் வருகை தரக்கூடியவர்கள் மற்றும் மாநகரப் பகுதியினை வசிப்பிடமாக கொண்டு பணி நிமித்தமாக வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் தங்கியிருந்து வருபவர்களை, மாநகராட்சி எல்லைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள காவல் துறையினரின் சோதனை சாவடியில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் பகுதியில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்படுவார்கள்.

    பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட்ட பின்னரே, மாநகரப் பகுதிகளுக்குள் நுழைய அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளுக்காக மாநகராட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காதவர்கள் மீது உரிய சட்ட விதிகளின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் கூறி உள்ளார்.
    Next Story
    ×