search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    விவசாயிகளுக்கு மேலும் ஒருமாத காலம் சலுகை நீட்டிப்பு- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

    விவசாயிகள் பயன்பெறும் வகையில் விளை பொருட்கள் சேமிப்பு கிடங்கு கட்டணம் கூடுதலாக ஒரு மாதத்திற்கு ரத்து செய்யப்படுகிறது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கொரோனா தாக்குதலைக் கட்டுப்படுத்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள பிரச்சனைகளை களைந்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் பயன்பாட்டிற்காக நவீன சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட்டு, அவை பயன்பாட்டில் இருந்து வருகின்றன. விவசாயிகள் விளை பொருட்களை இக்கிடங்குகளில் 180 நாட்கள் வரை வைத்து பாதுகாத்திடலாம். அதிக விலை கிடைக்கப் பெறும் காலங்களில் விளை பொருட்களை கிடங்கிலிருந்து எடுத்து விற்பனை செய்திட, கிடங்கு வாடகைக் கட்டணத்தை முதல் 30 நாட்களுக்கு செலுத்திட தேவையில்லை என அம்மாவின் அரசு ஏற்கனவே ஆணையிட்டிருந்தது. அது மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்படுகிறது.

    கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள விளை பொருட்களை அடமானத்தில் பேரில் அதிகபட்சம் 50 சதவீத சந்தை மதிப்பு அல்லது 3 லட்சம் ரூபாய் இவற்றில் எது குறைவோ அந்த அளவிற்கு பொருளீட்டுக் கடனைப் பெற்றிடலாம். குடனிற்கான கால அளவு 180 நாட்கள் ஆகும். இதற்கான வட்டி 5 சதவீதமாகும். குடனிற்கான வட்டி முதல் 30 நாட்களுக்கு செலுத்திட தேவையில்லை எனஆணையிடப்பட்டிருந்தது. அது மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்படுகிறது.

    காய்கறிகள் மற்றும் பழங்களை குளிர்பதனக் கிடங்குகளில் பாதுகாத்திட கட்டணம் முழுவதும் ரத்து பொது மக்களுக்கு தங்குதடையின்றி காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைத்திடவும், அவற்றை பாதுகாத்து, தேவைப்படும் காலங்களில் விற்பனை செய்வதற்கு ஏதுவாகவும், விவசாயிகளின் பயன் பாட்டிற்காக குளிர்பதனக் கிடங்குகள் இயங்கி வருகின்றன. இக்கிடங்குகளில் காய்கறிகள் மற்றும் பழங்களை சேமித்து வைக்க விவசாயிகளிடமிருந்து பயன்பாட்டுக் கட்டணத் தொகை வசூலிக்கப்பட்டு வருகின்றது. தற்போதுள்ள சூழ்நிலையினை கருத்தில் கொண்டும், மேலும் 15 நாட்களில் மாம்பழம் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர் பார்க்கப்படுவதாலும், விவசாயிகளிடமிருந்து வசூலிக்கப்படும்.

    இப்பயன்பாட்டு கட்டணத் தொகை 30.4.2020 வரை வசூலிக்கப்படமாட்டாது என்றும், இக்கட்டணத்தை முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சலுகை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.

    தற்போது நெல், சிறு தானியங்கள், பயறுவகைகள், நிலக்கடலை, எள், தேங்காய், பருத்தி, வெங்காயம், மிளகாய், புளி, முந்திரி, வெல்லம், மரவள்ளி மற்றும் சில மாவட்டங்களில் பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட விளை பொருட்களை விவசாயிகள் விற்பனை செய்யும் போது, வியாபாரிகளிடமிருந்து விற்பனை மதிப்பில் 1 சதவீதம் சந்தைக் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

    தற்போது நிலவி வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் விளைபொருட்களை நியாயமான விலையில், பொதுமக்களுக்கு விநியோகம் செய்திட ஏதுவாக, தற்போது வியாபாரிகள் செலுத்தும் 1 சதவீத சந்தைக் கட்டணத்தை 30.4.2020 வரை ரத்து செய்யப்பட்டு இருந்தது. இந்த சலுகை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×