search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக ஆய்வு

    ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளிடம் காணொலி காட்சி மூலமாக ஆய்வு நடத்தினார்.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுப்பதற்காக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்தவகையில், கொரோனா பேரிடர் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கோடு தி.மு.க. சார்பில் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற செயல்திட்டத்தை மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இந்தநிலையில் ‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு நேற்று காணொலிக்காட்சி மூலமாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சென்னை மற்றும் ஈரோடு வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய குழு தலைவர்கள் ஆகியோரிடம் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.

    ‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள, பொதுமக்களுக்கான உதவி எண்ணான 9073090730 என்ற செல்போன் எண்ணை தொடர்புகொண்டு பொதுமக்கள் தெரிவித்த குறைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கேட்டார். மேலும் பொதுமக்கள் தெரிவித்த அந்த குறைகள், பிரச்சினைகளுக்கு எட்டப்பட்ட தீர்வுகள் குறித்தும் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

    ‘ஒன்றிணைவோம் வா’ செயல் திட்டத்தினை முன்னெடுத்து, சீரிய முறையில் செயல்படுத்த பாடுபடும் தி.மு.க.வை சேர்ந்த முன்னணியினருக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். அதோடு, இந்த பேரிடர் சமயத்தில் துரிதமாக நடைபெற்று வரும் அந்த பணியை மேலும் செம்மையாக நடத்துவதற்கு தன்னுடைய ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் அவர் வழங்கினார்.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்றினால் பொதுமக்களும், ஊடகத்தினரும் பாதிப்படைந்து வரும் நிலையில், அவர்களைப் பாதுகாக்கும் பணியில் போதிய கவனம் செலுத்தாமல், ஊடகத்தினரைப் பழிவாங்கும் செயல்பாடுகளில் அ.தி.மு.க. அமைச்சர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவது கண்டனத்திற்குரியது.கோவையில் தூய்மைப் பணியாளர்கள் அதிகாலை 5.30 மணி முதலே வேலை பார்த்து வரும் நிலையில், பகல் 11 மணிவரை அவர்களுக்கு முறையாக உணவு வழங்கப்படுவதில்லை என்பதில் தொடங்கி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சரிவர நடைபெறவில்லை என்பதையும், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் வேலுமணி களத்திலேயே இல்லை என்பதையும், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் சுட்டிக்காட்டியதை, இணைய இதழ் வெளியிட்டிருந்தது.

    இதன் தொடர்ச்சியாக, இணையதள பத்திரிகையாளர்களை விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் அழைத்துச் சென்று பலமணி நேரம் அடைத்து வைத்திருந்ததும், அதன்பின்னர் இரவு நேரத்தில் இணையதள பதிப்பாளர் கைது செய்து சிறையில் அடைத்திருப்பதும் சட்டவிரோத செயல்பாடாகும்; ஆணவ அதிகாரத்தின் வெளிப்பாடாகும்.

    பேரிடர் நேரத்தில், இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கைவிட்டு, இணையதள பதிப்பாளரை விடுவித்து, ஊடகத்தினர் இடையூறின்றி சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    Next Story
    ×