search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    பெண் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா பரவியது எப்படி?

    வாணியம்பாடி பெண் இன்ஸ்பெக்டர் தனது வீட்டுக்கு சென்றபோது அல்லது வாகன சோதனையில் ஈடுபட்டபோது கொரோனா பரவியிருக்கலாம் என்ற கோணத்தில் சுகாதார துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி பகுதியில் கொரோனாவால் 3 பேர் பாதிக்கப்பட்டு வந்தனர். அதில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

    இந்நிலையில் வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீசார் உள்பட வாணியம்பாடி சரக போலீசார், தூய்மை பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் 230 பேருக்கு 2 நாட்களுக்கு முன்பு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் 229 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், பெண் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று இருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து வாணியம்பாடி பெண் இன்ஸ்பெக்டர் தங்கியிருந்த செட்டியப்பனூர் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

    அவர் தங்கியிருந்த வீட்டுக்கு எஸ்.பி. விஜயகுமார், மருத்துவ குழுவினர், வருவாய் துறையினர் சென்று ஆய்வு செய்தனர்.

    மேலும் பெண் இன்ஸ்பெக்டர் 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் 43 போலீசார் தனியார் திருமண மண்டபத்தில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இதையடுத்து தாலுகா போலீஸ் நிலையம் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த போலீஸ் நிலைய எல்லைக்குப்பட்ட பகுதிகளை டவுன் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    பெண் இன்ஸ்பெக்டர் கடந்த 19-ந்தேதி வாலாஜாவில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு சென்றுள்ளார்.

    அங்கு அவரது உறவினர்களும் இருந்துள்ளனர். அங்கிருந்து அவருக்கு கொரோனா பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதேபோல் வாணியம்பாடி ஜாப்ராபாத் மற்றும் முக்கிய பகுதிகளிலும் கொரோனா தடுப்பு பணி மற்றும் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டார்.

    இதன் மூலமும் அவருக்கு கொரோனா பரவியிருக்கலாம் என்ற கோணத்தில் சுகாதார துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    பெண் இன்ஸ்பெக்டரின் கணவர் சிதம்பரத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். தனது மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பதை அறிந்த அவர் அதிர்ச்சியடைந்தார். அவர் சிதம்பரத்தில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

    வாணியம்பாடி பெண் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதால் இன்று வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குறைந்த அளவே போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

    இதனால் வாகனங்களில் செல்பவர்கள் எந்தவித கட்டுப்பாடும் இன்றி சென்று வந்தனர்.

    பெண் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையொட்டி வாணியம்பாடி போலீசார் பீதியில் உறைந்துள்ளனர்.

    Next Story
    ×