search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஆர்பி உதயகுமார்
    X
    அமைச்சர் ஆர்பி உதயகுமார்

    மக்கள் ராணுவ கட்டுப்பாடுடன் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும்- ஆர்பி உதயகுமார் வேண்டுகோள்

    மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கை மக்கள் ராணுவ கட்டுப்பாடுகளுடன் கடைபிடிக்க வேண்டும் என்று அமைச்சர் ஆர்பி உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மதுரை:

    கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஊரடங்கு சமயத்தில் சாலை ஓரங்களில் தவித்த ஆதரவற்றோர் மற்றும் முதியோர்கள் மீட்கப்பட்டு மதுரை மாநகராட்சி சார்பில் பூங்கா முருகன் கோவில் சஷ்டி மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வழங்கினார். முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கு செய்து தரும் வசதிகள் குறித்தும் அதிகாரிகளுடன் கேட்டறிந்தார். பின்னர் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கூறியதாவது:-

    உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பிடியிலிருந்து நாட்டை பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு அனைத்து முன்னேற்பாடுகளை செய்து வருகிறார். ஏழை எளிய மக்கள் பசியின்றி வாழ தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு செய்துள்ளது.

    தமிழகம் முழுவதுமுள்ள அம்மா உணவகங்கள் இன்றைக்கு மக்கள் பசி தீர்க்கும் அமுதசுரபியாக மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கும் ஆலயமாக திகழ்கிறது.

    மத்திய அரசு தேசிய பேரிடராக கொரோனா தாக்கத்தை அறிவித்துள்ளது. இந்த கொரோனா வைரஸ் பிடியிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கை மக்கள் ராணுவ கட்டுப்பாடுகளுடன் கடைபிடிக்க வேண்டும். போர்க்களத்தில் கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனா வைரசை வீழ்த்தும் நடவடிக்கையை முதல்-அமைச்சர் சிறப்பாக செய்து வருகிறார். எனவே தமிழக மக்கள் அவருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது கலெக்டர் வினய், மாநகராட்சி கமி‌ஷனர் விசாகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×