search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் பிரபாகர்
    X
    கலெக்டர் பிரபாகர்

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா வைரஸ் உலகளாவிய நோய் தொற்றாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை தடுக்கும் பொருட்டு வருகிற மே மாதம் 3-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஊரடங்கை தளர்த்தப்பட வேண்டிய நடைமுறை குறித்து மாநில அரசுகள் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன் பேரில், வல்லுனர் குழு அமைத்து, அந்த குழுவின் ஆலோசனைப்படி, தமிழகத்தில் வருகிற மே மாதம் 3-ந் தேதி வரை தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள செயல்பாடுகளை எந்த ஒரு தளர்வுமின்றி கடைபிடிக்குமாறு அனைத்து அரசு துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள், தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் யாரும் வெளியில் வருவதை தவிர்த்தும், மிகவும் அத்தியாவசியமான தேவைகளுக்கு வெளியில் வரும் போது, முக கவசம் அணிந்து கொண்டு, ஒருவருக்கொருவர் 3 அடி சமூக விலகலை கடைப்பிடித்து, கொரோனா வைரஸ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும், வெளி மாநிலங்களிலிருந்தோ, வெளி மாவட்டங்களில் இருந்தோ கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்தவர்கள் மற்றும் இந்த மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டத்திற்கு சென்று திரும்பியவர்கள் தாங்களாகவே முன்வந்து கொரோனா நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளுமாறும், அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

    அதே போன்று, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு புதிதாக வருபவர்களை சம்பந்தப்பட்ட சோதனைச்சாவடிகளுக்கு அருகிலேயே தனிமைப்படுத்தி இருக்க வைத்து, அவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு, முடிவுகள் பெறப்பட்ட பின்பே வீடுகளுக்கு அனுப்பப்படுவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×