search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடை செய்யப்பட்ட பகுதி
    X
    தடை செய்யப்பட்ட பகுதி

    தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதிகளாக 385 இடங்கள் அறிவிப்பு

    தமிழ்நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதிகளாக 385 இடங்கள் அறிவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னையில் 112 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
    சென்னை:

    தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 1596 ஆக உயர்ந்தது. நேற்று மட்டும் ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது

    கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் மற்றும் பஞ்சாயத்து அமைப்புகள் மூலம் 789 கட்டுப்பாட்டு அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    இந்த கட்டுப்பாட்டு அறைகள் மூலம் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதித்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதித்த நபர்கள் இருக்கும் தெருக்களுக்குள் மற்றவர்கள் நடமாடுவதை தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைத்து அவர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

    அந்தவகையில் தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று நோய் தடுப்பு பகுதிகளாக 385 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த 385 இடங்களும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்காக அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் போலீசாரும் சுழற்சி முறையில் 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள் உள்ளன. சென்னையில் இன்று காலை வரை கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் சென்னையில் 55 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ்

    கடந்த 3 நாட்களில் மட்டும் சென்னையில் 123 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 9 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 4 பேர். 10 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் 24 பேர் உள்ளனர். 30 முதல் 39 வயதுக்குள் 79 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் 80 வயதை கடந்தவர்களாவார்கள்.

    இந்த 358 பேரும் வசித்த 112 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரம் மண்டலம்தான் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மண்டலத்தில் மட்டும் 116 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து தண்டையார்பேட்டை மண்டலத்தில் 46 பேரும், தேனாம்பேட்டை, திரு.வி.க.நகர் மண்டலங்களில் தலா 42 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 35 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அம்பத்தூர், மணலி ஆகிய இரு மண்டலங்களும் கொரோனா பாதிப்புக்கு உட்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் அம்பத்தூர் மண்டலத்தில் நேற்று ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அம்பத்தூர் மண்டலமும் கொரோனா அபாய வளையத்துக்குள் வந்துள்ளது.

    சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மணலி மண்டலத்தில் மட்டும் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவாதது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த மண்டலத்தில் கட்டுப்பாடுகளை அதிகாரிகள் முன்னெச்சரிக்கையுடன் மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×