search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்லூரி மாணவிக்கு பிரசவம் பார்த்த காதலன் சவுந்தர்
    X
    கல்லூரி மாணவிக்கு பிரசவம் பார்த்த காதலன் சவுந்தர்

    கல்லூரி மாணவிக்கு காதலன் பிரசவம் பார்த்ததால் நேர்ந்த விபரீதம்

    யூ டியூப் வீடியோவை பார்த்து கொண்டே கல்லூரி மாணவிக்கு பிரசவம் பார்த்த காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் சவுந்தர் (வயது 27) தனியார் கியாஸ் கம்பெனியில் கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் வேலை பார்த்து வருகிறார்.

    இவரும் கம்மார்பாளையத்தை சேர்ந்த கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் நர்மதாவும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்தனர்.

    இதில் நர்மதா கர்ப்பமானார். இது பற்றி காதலர்கள் இருவரும் பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் நர்மதா 8 மாத கர்ப்பம் ஆனார்.

    நேற்று மாலை வீட்டில் இருந்த நர்மதாவுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் பிரசவ வலி ஏற்பட்டு இருப்பதாக நினைத்து அவர் பயந்தார்.

    பெற்றோருக்கு தெரியாமல் இருப்பதற்காக வயிற்று வலி பற்றி காதலன் சவுந்தருக்கு செல்போன் மூலம் தெரிவித்தார்.

    இதையடுத்து வெளியில் யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக சவுந்தர் தானே காதலிக்கு பிரசவம் பார்க்க முடிவு செய்தார். இதுபற்றி அவர் மாணவி நர்மதாவுக்கு தெரிவித்து ஊருக்கு வெளியே வரவழைத்தார்.

    பின்னர் இருவரும் கம்மார்பாளையம் அருகே உள்ள காப்பு காட்டுக்கு சென்றனர். அங்கே காதலி நர்மதாவை படுக்க வைத்துவிட்டு சவுந்தர் யுடியூப்பில் உள்ள பிரசவ வீடியோவை பார்த்தார்.


    அதில் உள்ளபடியே நர்மதாவுக்கு பிரசவம் பார்த்தார். அப்போது கையால் குழந்தையை பிடித்து இழுத்தார். இதில் குழந்தையின் ஒரு கை துண்டானது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சவுந்தர், குழந்தையின் கையை காட்டிலேயே வீசினார். மேலும் குழந்தையை எப்படியாவது வெளியே எடுத்து விட வேண்டும் என்று நினைத்து தொப்புள் கொடியை பிளேடால் அறுக்க முயன்றார்.

    இதில் நர்மதாவின் குடலில் லேசாக அறுபட்டதாக தெரிகிறது. இதனால் அதிக அளவு ரத்த போக்கு ஏற்பட்டது. அவர் அலறி துடித்தார்.

    நிலைமை விபரீதம் ஆனதை அறிந்த சவுந்தர் பின்னர் காதலி நர்மதாவை மோட்டார் சைக்கிளிலேயே அமரவைத்து பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது நர்மதா ஆபத்தான நிலையில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து உடனடியாக நர்மதாவை சென்னையில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு நர்மதாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் இறந்த நிலையில் ஆண் குழந்தை எடுக்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது பற்றி அறிந்ததும் கும்மிடிப்பூண்டி போலீசார் சவுந்தரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    யுடியூப் வீடியோவை பார்த்து காதலிக்கு பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்த சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×