search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    ‘கொரோனா அச்சம் தவிர்ப்போம்’- வீடியோ வெளியிட்டு மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு

    கருணாநிதி சொன்னபடி வருமுன் காப்போம்! கொரோனா அச்சம் தவிர்ப்போம்! என்று மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு உள்ளார்.
    சென்னை:

    கொரோனா நோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ‘அன்பான வேண்டுகோள்’ என்ற தலைப்பில் 2 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ பதிவிட்டு உள்ளார்.

    அந்த வீடியோ பதிவில் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பதாவது:-

    அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள். உலகம் எங்கும் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இப்போது இந்தியாவுக்குள் பரவி தமிழ்நாட்டுக்குள் வந்து தாக்கிக்கொண்டிருக்கிறது. இந்த நெருக்கடியான சூழலில் கொரோனா நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சில கருத்துகளை சொல்ல நினைக்கிறேன்.

    வள்ளுவர் சொன்னது மாதிரி ‘நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’ என்பதன் அடிப்படையில் இந்த கொடிய நோயை எதிர்கொள்வதுதான் நமக்கும், நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லது.

    காய்ச்சல், தொண்டையில் புண், குரல் கரகரப்பு, இருமல், பசியின்மை, வயிற்று வலி, உடல் சோர்வு இப்படி லேசான அறிகுறி இருந்தால் கூட உடனடியாக பக்கத்தில் இருக்கும் டாக்டரிடம் காட்டி சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.

    இந்த நோய்க்கு இதுவரையில் மருந்து கண்டுபிடிக்கப்படாததால், கருணாநிதி சொன்னபடி வருமுன் காப்போம் என்ற அறிவுரையின்படி முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்துங்கள்.

    அரசியல் கட்சிகளுக்கு முன் உதாரணமாக தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்திருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் மார்ச் 31-ந் தேதி வரையில் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. அந்தந்த பகுதிகளில் இருக்கிற தி.மு.க.வினர், நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் கிடைப்பதற்கு உடனடியாக ஏற்பாடு பண்ணுங்கள்.

    இந்த துயரமான நேரத்தில் மக்களுக்கு உற்ற துணையாகவும், உண்மை உறவாகவும் நாம் இருக்கிறோம் என்ற உணர்வை தி.மு.க.வினர் ஏற்படுத்திட வேண்டும்.

    இப்போது நாடு எதிர்நோக்கி இருக்கும் ஆபத்து என்பது மிக, மிக மோசமானது. கண்ணுக்கு தெரியாத ஆபத்து எதிரியோடு நடத்தும் உயிரியல் போர் என்று இதை சொல்கிறார்கள்.

    உலகம் எத்தனை சோகங்களை சந்தித்துள்ளது. அதனை போன்று இதனையும் வெல்வோம். அதற்கு வருமுன் காப்போம். கொரோனா என்ற அச்சம் தவிர்த்து அறிவியலால் வெல்வோம்.

    நோயற்ற வாழ்வை நோக்கிய சீரான சமூகம் படைக்க ஒவ்வொருவரும் சபதம் ஏற்போம். வணக்கம்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார்.

    Next Story
    ×