search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை படத்தில் காணலாம்.
    X
    பெண் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை படத்தில் காணலாம்.

    கரூர் அருகே பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை வி‌ஷம் கொடுத்து கொலை?

    கரூர் அருகே பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை இறந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குளித்தலை:

    கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள வடுகப்பட்டி கிழக்கு மேடு பகுதியை சேர்ந்தவர் சிவ சிங்கபெருமாள் (வயது 40). இவரது மனைவி சங்கீதா (30). கூலிவேலை செய்து வருகின்றனர்.

    இந்த தம்பதிக்கு சசினா (10), சாதனா (7) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் மீண்டும் கர்ப்பம் அடைந்த சங்கீதாவிற்கு, பஞ்சப்பட்டியில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 10-ந்தேதி மீண்டும் பெண் குழந்தை பிறந்தது.

    இதையடுத்து சிவசிங்கபெருமாள் தனது மனைவி மற்றும் குழந்தையை வீட்டிற்கு அழைத்து சென்றார். நேற்று முன்தினம் பிறந்த குழந்தைக்கு உடல்நிலை சரி இல்லை என்று கூறி, பஞ்சப்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிவசிங்கபெருமாள், சங்கீதா ஆகிய இருவரும் கொண்டு சென்று உள்ளனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக குளித்தலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து அந்த குழந்தையை யாருக்கும் தெரியாமல், தோட்டத்தில் குழி தோண்டி புதைத்து விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போத்துராவுத்தன்பட்டி கிராம நிர்வாக அதிகாரி (பொறுப்பு) பிரபு தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரில், சிவசிங்கபெருமாள்-சங்கீதா தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளது. மேலும் சங்கீதா 2 முறை கருகலைப்பு செய்து உள்ளார். தற்போது 3-வது முறையாக மீண்டும் இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை கொன்று புதைத்து விட்டார்கள் என்று கூறப்பட்டு இருந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவசிங்கபெருமாள்-சங்கீதா தம்பதியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கீதாவுக்கு கடந்த 10-ந் தேதி பெண் குழந்தை பிறந்த போது அவர் அங்கிருந்த டாக்டர் மற்றும் மருத்துவ பணியாளர்களிடம் எனக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளது. மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளதால் என்னால் வளர்க்க முடியாது. எனவே நீங்களே குழந்தையை பார்த்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

    டாக்டர்கள் அவருக்கும், அவரது கணவருக்கும் அறிவுரைகள் கூறி குழந்தையை பெற்று செல்லும்படி கூறியதையடுத்து, அவர்கள் குழந்தையுடன் வீட்டிற்கு சென்றனர்.

    நேற்று முன்தினம் சங்கீதா பஞ்சப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தையை கொண்டு வரும்போது ஊதா நிறத்தில் இருந்துள்ளது. டாக்டர்களிடம் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதையடுத்து குளித்தலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    ஆனால் சங்கீதா குழந்தையை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளார். ஏற்கனவே பெண் குழந்தை வேண்டாம் என்று கூறியதாலும், குழந்தை ஊதா நிறத்தில் இருந்ததா லும் குழந்தைக்கு வி‌ஷம் கொடுத்து கொலை செய்தி ருக்கலாம் என சந்தேகம் வரவே டாக்டர்கள் இது குறித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளனர். அதன் பிறகே கிராம நிர்வாக அதிகாரி போலீசில் புகார் செய்துள்ளார்.

    எனவே பெண் குழந்தை என்பதால் சங்கீதா- சிவசிங்க பெருமாள் குழந்தைக்கு வி‌ஷம் கொடுத்து கொலை செய்தனரா? அல்லது உடல் நலம் பாதிப்பால் இறந்ததா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்காக புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் கிருஷ்ணராயபுரம் தாசில்தார் முன்னிலையில் இன்று தோண்டி எடுக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. பிரேத பரிசோதனை முடிவில் குழந்தை கொலை செய்யப்பட்டதா? அல்லது உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்ததா? என்ற விவரம் தெரியவரும்.

    குழந்தை கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தால் சிவசிங்கபெருமாள் - சங்கீதா மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை உசிலம்பட்டி பகுதியில் பெண் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து பெற்றோரே கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தோகைமலை பகுதியில் பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×