search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட வாகனத்தை படத்தில் காணலாம்.
    X
    மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட வாகனத்தை படத்தில் காணலாம்.

    திருச்சி அருகே இந்து முன்னணி பிரமுகர் வாகனம் தீ வைத்து எரிப்பு

    திருச்சி அருகே நள்ளிரவில் இந்து முன்னணி பிரமுகர் இரு சக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மணிகண்டத்தை அடுத்த சோமரசம்பேட்டை அருகேயுள்ள அதவத்தூர் சிவா நகர் பகு தியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 32)

    இந்து முன்னணி அமைப்பின் ஒன்றிய பொறுப்பாளராக இருந்து வரும் அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று சக்திவேலின் மனைவி வெளியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு தனது குழந்தைகளுடன் சென்றிருந்தார். எனவே வீட்டில் சக்திவேல் மட்டும் தனியாக இருந்தார். அவருக்கு துணையாக சகோதரர் உடனிருந்தார்.

    நேற்று பணி முடிந்து வீட்டிற்கு வந்த சக்திவேல் தனது இருசக்கர வாகனத்தை வழக்கம்போல் வீட்டின் வெளியே நிறுத்தியிருந்தார். நள்ளிரவில் சக்திவேலும், அவரது சகோதரரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர்.

    அப்போது அங்கு மர்ம நபர்கள் சிலர் வந்துள்ளனர். அவர்கள் அந்த பகுதியை தொடர்ந்து நோட்டமிட்டு ஆள் நடமாட்டம் இல்லாததை உறுதி செய்தனர். பின்னர் சக்திவேலின் இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்து எரித்தனர். பின்னர் சாலையில் கிடந்த கற்களை எடுத்து வீட்டிற்குள் சரமாரியாக வீசினர்.

    இதில் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இந்த சத்தம் கேட்டு பதறி எழுந்த சக்திவேல் வெளியே ஓடி வந்தார். அதற்குள் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

    இதற்கிடையே தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை அவர்கள் அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் வாகனம் முற்றிலும் எரிந்தது.

    உடனடியாக இந்த சம்பவம் குறித்து சக்திவேல் சோமரசம்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் தடயங்களையும் சேகரித்தனர். அர சியல் காரணங்களுக்காக சக்திவேலின் வாகனத்திற்கு தீ வைத்து, வீட்டையும் சேதப் படுத்தினார்களா அல்லது ரியல் எஸ்டேட் தொழில் போட்டியில் இது நடத்தப்பட்டதா? என்று தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    திருச்சி அருகே இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் நடத்தப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை கணபதி பகுதியில் மசூதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனை கண்டித்து அங்கு கடையடைப்பு போராட்டம் நடந்தது.

    அதன் தொடர்ச்சியாக நேற்று கோவை ராம்நகர் பகுதியில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது திருச்சியில் மர்ம நபர்கள் வாகனத்திற்கு தீ வைத்துள்ளனர்.

    இந்த செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. 

    Next Story
    ×